நாமக்கல் மாவட்ட ஊராட்சி தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த சாரதா தேர்வு


நாமக்கல் மாவட்ட ஊராட்சி தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த சாரதா தேர்வு
x
தினத்தந்தி 11 Jan 2020 10:30 PM GMT (Updated: 11 Jan 2020 7:15 PM GMT)

நாமக்கல் மாவட்ட ஊராட்சி தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த சாரதா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் மொத்தம் உள்ள 17 இடங்களில் அ.தி.மு.க. 12 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான பா.ம.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இதேபோல் தி.மு.க. கூட்டணியினர் 4 இடங்களில் வெற்றி வாகை சூடினர்.

இந்த நிலையில் மாவட்ட ஊராட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நேற்று நாமக்கல் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் அ.தி.மு.க. சார்பில் 12-வது வார்டு உறுப்பினர் சாரதா தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

போட்டியின்றி தேர்வு

எனவே அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான மெகராஜ் அறிவித்தார். இதையடுத்து மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட சாரதாவுக்கு பல்வேறு தரப்பினரும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதேபோல் பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தார். எனவே அவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக தேர்தல் நடைபெற்றபோது அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களை தவிர வேறு யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.

அமைச்சர்கள் வாழ்த்து

புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர் சாரதா மற்றும் துணை தலைவர் பி.ஆர்.சுந்தரம் ஆகியோருக்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்ட ஊராட்சி தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த காந்திமுருகேசன் இருந்து வந்தார். தற்போது அந்த பதவியை மீண்டும் அ.தி.மு.க. தக்க வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story