பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சியில் தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்பட தொடங்கின


பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சியில் தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்பட தொடங்கின
x
தினத்தந்தி 12 Jan 2020 10:45 PM GMT (Updated: 12 Jan 2020 3:36 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சியில் தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்பட தொடங்கின.

திருச்சி,

பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெளியூர்களில் வசிப்பவர்கள் பலர் தங்களது சொந்த ஊருக்கு செல்வது உண்டு. பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் மன்னார்புரம் ரவுண்டானா அருகே மற்றும் சோனா, மீனா தியேட்டர் அருகே தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தற்காலிக பஸ் நிலையங்கள் நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்தன. மதுரை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் மன்னார்புரம் ரவுண்டானா அணுகுசாலையில் இருந்தும், புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பஸ்கள் மன்னார்புரம் ரவுண்டானாவில் கல்லுக்குழி செல்லும் சாலை அருகேயும் இருந்து இயக்கப்படு கின்றன. இதேபோல தஞ்சாவூர் மார்க்க பஸ்கள் சோனா, மீனா தியேட்டர் அருகே இருந்து இயக்கப்படுகின்றன. வருகிற 20-ந் தேதி வரை இந்த தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்படும். மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் மற்ற பஸ்களில் எந்தவித மாற்றமும் இல்லை.

டவுன் பஸ்கள்

மன்னார்புரம் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து மத்திய பஸ் நிலையத்திற்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்காலிக பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்னதாக தற்காலிக பஸ் நிலையத்தில் பஸ் போக்குவரத்தை போலீஸ் துணை கமிஷனர் வேதரத்தினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனர்கள் விக்னேஸ்வரன், அருணாச்சலம், அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் ராமநாதன் மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story