பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 13 Jan 2020 10:15 PM GMT (Updated: 13 Jan 2020 9:00 PM GMT)

பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி, கோவில்பட்டி அருகே விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று காலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தாலுகா செயலாளர் லெனின்குமார் தலைமை தாங்கினார்.

மழையில் சேதம் அடைந்த பயிர்களை கணக்கிட்டு, விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும். கடந்த 2018-2019-ம் ஆண்டு லிங்கம்பட்டி, பெருமாள்பட்டி ஆகிய பஞ்சாயத்துகளில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு குறைவான காப்பீட்டுத்தொகையே வழங்கப்பட்டது. கடந்த 2016-2017-ம் ஆண்டு பருத்தி பயிரிட்ட விவசாயிகளில் 35 பேருக்கு மட்டுமே காப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டது. மீதி 74 பேருக்கு காப்பீட்டுத்தொகை வழங்கப்படவில்லை. எனவே பாகுபாடின்றி அனைவருக்கும் காப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், பஞ்சாயத்து தலைவர்கள் பிச்சையம்மாள் (லிங்கம்பட்டி), முரளிதரன் (பெருமாள்பட்டி), விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நல்லையா, இளைஞர் பெருமன்ற தேசியக்குழு உறுப்பினர் பாலமுருகன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணைத்தலைவர் தமிழரசன் உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

உடனே கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, வருவாய் ஆய்வாளர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் சங்கரலிங்கம் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புள்ளியியல் கணக்கெடுப்பாளர்கள், காப்பீட்டு நிறுவனத்தினருடன் வருகிற 20-ந்தேதி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வு காண ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மதியம் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story