குடியுரிமை சட்டம் குறித்த அவதூறுகளை நம்ப வேண்டாம் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்


குடியுரிமை சட்டம் குறித்த அவதூறுகளை நம்ப வேண்டாம் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 14 Jan 2020 11:15 PM GMT (Updated: 14 Jan 2020 5:48 PM GMT)

குடியுரிமை சட்டம் குறித்த அவதூறுகளை யாரும் நம்ப வேண்டாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

சேலம்,

தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் மத்திய அரசு பல்வேறு விருதுகளை வழங்கியுள்ளது. குறிப்பாக நிர்வாக திறமையில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தினால் எந்த ஒரு சிறுபான்மையினரும் பாதிக்கப்படமாட்டார்கள். இதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பரப்பப்படும் அவதூறுகளை யாரும் நம்ப வேண்டாம். இது தொடர்பாக தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்.

நடுநிலையோடு

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் காவல்துறை மூலம் உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது. இதனை சீர்குலைக்கும் முயற்சியில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். தமிழக எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற்றுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் அனைத்து கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் வாக்குச்சீட்டுகளை பிரித்து அதனை வெளிப்படையாக காண்பித்து எண்ணியுள்ளனர். மேலும், வாக்கு எண்ணிக்கை முழுவதும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் சேலம், ஏற்காடு, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மறுநாள் காலை வரையிலும் நீடித்தது. அதிகாரிகள் கொஞ்சம் கூட ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட்டுள்ளனர்.

சில இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்களே மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளனர். எனவே, உள்ளாட்சி தேர்தலில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

அன்புமணி ராமதாஸ்

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியினர் வேண்டும் என்றே திட்டமிட்டு பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். அவர்கள் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை சொல்லி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., அவரது கட்சி தொண்டர்கள் மத்தியில், அ.தி.மு.க. மீது குற்றச்சாட்டு தெரிவித்து பேசவில்லை. பொதுவாக அனைத்து கட்சிகளிலும் தொண்டர்கள், நிர்வாகிகள் ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகளுக்கு வர ஆசைப்படுவார்கள். அதுதான் இயல்பு. அந்த வகையில் பா.ம.க. தொண்டர்களை ஊக்கப்படுத்துவதற்காக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும், எப்படியாவது மக்கள் மத்தியில் தவறான எண்ணங்களை பரப்ப வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்.

எங்களை பொறுத்தவரையில் மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் வழிகாட்டுதலின்படி சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருகிறோம். இதனால் பல்வேறு துறைகளில் தமிழகத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் மட்டும் எதையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். எங்களை பொறுத்தவரையில் மக்கள் தான் எஜமானர்கள். மக்கள் தான் நீதிபதிகள். அவர்களது எண்ணப்படி தான் எங்களது ஆட்சி செயல்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் வாழ்த்து

முன்னதாக ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. புறநகர் மாவட்ட அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், துணைத்தலைவர்கள், ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், கிராம ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் ஒன்றியம் வாரியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும், அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்களிடம் முதல்-அமைச்சர் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

Next Story