சென்னை, கோவையில் இருந்து வந்த பஸ், ரெயில்களில் அலைமோதிய கூட்டம்


சென்னை, கோவையில் இருந்து வந்த பஸ், ரெயில்களில் அலைமோதிய கூட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2020 9:45 PM GMT (Updated: 14 Jan 2020 7:18 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை, கோவையில் இருந்து நெல்லை வந்த பஸ், ரெயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

நெல்லை, 

பொங்கல் பண்டிகையையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் வருகிற 19-ந் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் சென்னை, கோவை, திருப்பூர், சேலம், ஓசூர், செங்கல்பட்டு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் குடும்பத்துடன் தங்கி இருந்து பணிபுரிந்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால் அவர்கள் தங்களது சொந்த ஊரில் பொங்கலை கொண்டாட நேற்று முன்தினம் பள்ளி, கல்லூரிகள் முடிவடைந்த பிறகு மாலையில் பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனால் அந்தந்த ஊர்களில் பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

நேற்று முன்தினம் இரவில் பஸ் மற்றும் ரெயில்களில் புறப்பட்டவர்கள் நேற்று காலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் குடும்பம், குடும்பமாக வந்திறங்கினர். இதேபோல் வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகில் ஆம்னி பஸ்களிலும் ஏராளமானோர் வந்து இறங்கினர்.

நெல்லையில் இருந்து மீண்டும் பஸ் மற்றும் பாசஞ்சர் ரெயில்களில் ஏறி, தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் புறப்பட்ட சென்னை தாம்பரம்-நெல்லை அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று பகலில் புறப்பட்ட சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ், திருச்சி-திருவனந்தபுரம் இண்டர் சிட்டி ரெயில்களில் ஏராளமான பயணிகள் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் வந்து இறங்கினர்.

இதேபோல் சென்னையில் இருந்து தென்காசிக்கு வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில், தூத்துக்குடி வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் ஏராளமானோர் வந்து இறங்கினர்.

Next Story