பொங்கல் பண்டிகையையொட்டி, உழவர் சந்தைகளில் ரூ.1 கோடிக்கு காய்கறிகள் விற்பனை


பொங்கல் பண்டிகையையொட்டி, உழவர் சந்தைகளில் ரூ.1 கோடிக்கு காய்கறிகள் விற்பனை
x
தினத்தந்தி 14 Jan 2020 11:00 PM GMT (Updated: 14 Jan 2020 7:42 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 785-க்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. இதையொட்டி பூஜை பொருட்கள் வாங்குவதற்கு கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது.

சேலம்,

பொங்கல் பண்டிகை இன்று (புதன்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் மாநகரில் உள்ள அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை, சூரமங்கலம் ஆகிய உழவர் சந்தைகளில் நேற்று வழக்கத்தைவிட காய்கறிகள் வாங்க பொதுமக்கள் அதிகமாக குவிந்தனர். இதனால் உழவர் சந்தைகளில் கூட்டம் அலைமோதியது. இந்த 4 உழவர் சந்தைகளில் மொத்தம் 1 லட்சத்து 75 ஆயிரத்து 846 கிலோ காய்கறிகள் ரூ.53 லட்சத்து 67 ஆயிரத்து 475-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த சந்தைகளில் 662 விவசாயிகள் கொண்டு வந்திருந்த காய்கறிகளை 36 ஆயிரத்து 359 நுகர்வோர்கள் வாங்கி சென்றனர். குறிப்பாக கத்தரிக்காய், வாழைக்காய், கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், தக்காளி, முள்ளங்கி, முட்டைக்கோஸ், சேனை கிழங்கு உள்ளிட்ட அனைத்து வகையான காய்கறிகளையும் பொதுமக்கள் அதிகமாக வாங்கி சென்றதை காணமுடிந்தது. இதுதவிர வாழைப்பழம், வாழை இலை விற்பனையும் நேற்று ஜோராக நடைபெற்றது.

38,560 நுகர்வோர்கள்

இதேபோல் எடப்பாடி, இளம்பிள்ளை, மேட்டூர், ஜலகண்டாபுரம், ஆத்தூர், தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய உழவர் சந்தைகளில் மொத்தம் 1 லட்சத்து 54 ஆயிரத்து 236 கிலோ காய்கறிகள் ரூ.49 லட்சத்து 15 ஆயிரத்து 310-க்கு விற்பனை செய்யப்பட்டது. உழவர் சந்தைகளுக்கு 604 விவசாயிகள் கொண்டு வந்த காய்கறிகளை 38 ஆயிரத்து 560 நுகர்வோர்கள் வாங்கி சென்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளில் மட்டும் ரூ.1 கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 785-க்கு விற்பனை செய்யப்பட்டதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர். அஸ்தம்பட்டி, சூரமங்கலம், தாதகாப்பட்டி, அம்மாபேட்டை ஆகிய உழவர் சந்தைகளுக்கு முன்பு சிலர் தற்காலிக கடைகள் அமைத்து கரும்பு, மஞ்சள் குலை, காப்புக்கட்டு பூ மற்றும் பூஜை பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்தனர். இதை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

கடைவீதியில் கூட்டம்

சேலம் சின்ன கடைவீதி, அக்ரஹாரம், செவ்வாய்பேட்டை, பால் மார்க்கெட், அன்னதானப்பட்டி, குகை, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், குரங்குச்சாவடி உள்ளிட்ட பல பகுதிகளில் கரும்பு, வாழைப்பழம், மஞ்சள் குலை, காப்புக்கட்டு பூக்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.துணி கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் கடைவீதியில் நேற்று வழக்கத்தைவிட கூட்டம் அலைமோதியது. போக்குவரத்து நெரிசல் மற்றும் குற்றச்சம்பவம் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story