போடி அருகே, இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகள் - துணை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்


போடி அருகே, இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகள் - துணை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 Jan 2020 11:00 PM GMT (Updated: 14 Jan 2020 7:57 PM GMT)

போடி அருகே இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகளை துணை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

போடி, 

போடி அருகே மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறையின் சார்பில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பூப்பந்து போட்டியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகள் மற்றும் 22 பேரூராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் முதல் கட்டமாக போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி உள்பட 4 இடங்களில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தின் கீழ் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

போட்டியின் மூலம் இளைஞர்களிடையே தலைமைப் பண்பு, கிராம இளைஞர்களிடம் கூட்டு மனப்பான்மை ஆகியவை உருவாக்கப்படும். மேலும் கிராமங்களில் உள்ள விளையாட்டு திறன்மிக்க இளைஞர்களை கண்டறிந்து, அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும். அவர்களை உயர்மட்ட போட்டிகளில் சாதனை படைக்க வைப்பதே இந்த திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். எனவே, இத்திட்டத்தின் மூலம் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபட்டு இளைஞர்கள் பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரிதா, போடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுதா, மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.எம். சையதுகான், ஆர்.பார்த்திபன், போடி நகராட்சி முன்னாள் தலைவர் பழனிராஜ், ஒன்றிய செயலாளர் சற்குணம், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேபோல் உப்புக்கோட்டை ஊராட்சி பாலார்பட்டியில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நடந்தது. இதற்கு தனி அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார் ஊராட்சி மன்றத் தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். அந்த மைதானத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் திருப்பதி செய்திருந்தார்.

Next Story