பள்ளி-கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா


பள்ளி-கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா
x
தினத்தந்தி 14 Jan 2020 11:00 PM GMT (Updated: 14 Jan 2020 9:04 PM GMT)

மாவட்டத்தில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

சிவகங்கை,

காரைக்குடி ஸ்ரீராஜராஜன் கல்வி குழுமம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக நியூயார்க்கில் உள்ள டாக்டர் சதாசிவம், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். உறியடித்தல், கயிறு இழுத்தல், கோலப்போட்டி, சிலம்ப போட்டி, பேச்சுப் போட்டி கட்டுரைப்போட்டி, தண்ணீர் நிரப்புதல், தேங்காய் உடைத்தல் உள்பட பல போட்டிகள் நடைபெற்றன. விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதேபோல் காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளியில் படிக்கும் இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தமிழர் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். மேலும் பாரம்பரிய நாட்டுப்புற நடனம், நாட்டுப் புறப்பாடல், கயிறு இழுத்தல், கபடி, உறியடித்தல் ஆகிய விளையாட்டு போட்டிகளும் நடந்தன. சூரிய பொங்கல் மற்றும் பாரம்பரிய உணவு முறைகள் குறித்து அறிமுகம் செய்யப்பட்டது. விழாவில் பள்ளியின் தாளாளர் குமரேசன், துணை தாளாளர் அருண்குமார், இயக்குனர் சாந்திகுமரேசன் மற்றும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காரைக்குடி ராஜா ஹெரால்ட் பள்ளி மற்றும் எஸ்.ஆர். கல்வி நிறுவனத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைமையாசிரியை உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். வக்கீல் அப்துல் சித்திக் முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் ராஜாமுகமது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் மாணவர்கள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கொண்டாடினர். காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப் பள்ளியில் பொங்கல் விழாவையொட்டி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை சாவித்திரி தலைமை தாங்கினார். விழாவில் ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள், சிட்டி லயன்ஸ் சங்கத்தின் நிர்வாகிகள் பாதம் பிரியான், சிற்பி சேது தியாகராஜன், துர்க்காதேவி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளி உதவி ஆசிரியர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரியில் நடந்த விழாவில் கல்லூரி தாளாளர் சையது, இயக்குனர் மனோகர், காஸ்மாஸ் தலைவர் பழனியப்பன், லயன்ஸ் கிளப் வட்டார தலைவர் சரவணன், கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக இருதயராஜன் கலந்துகொண்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் அபுபக்கர்சித்திக் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் செய்திருந்தனர். தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சிவகங்கை சாம்பவிகா மழலையர் மற்றும் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி செயலாளர் சேகர் தலைமையில் விழா நடைபெற்றது. விழாவில் தலைமையாசிரியர் முத்துக்குமார், உதவி தலைமையாசிரியர் தியாகராஜன், சாம்பவிகா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை நாகராணி உள்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டுறவு மேலாண்மை நிலையம்

சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டய மாணவ-மாணவிகள் சார்பில் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரன், மேலாண்மை இயக்குனர் பழனீஸ்வரி, கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் உதயகுமார் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர். சிவகங்கையை அடுத்த இடையமேலூர் விக்னேஸ்வர வித்யாலயா பள்ளியில் அறக் கட்டளை நிர்வாகி இளங்கோ தலைமையில் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஒன்றிய கவுன்சிலர் அம்சவள்ளி, பள்ளி முதல்வர் ஜானகி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் கிருஷ்ணவேணி, துணை மேலாளர் தனப்பிரியா உள்பட பலர் கலந்துகொண்டனர். சிவகங்கையை அடுத்த அரசனி முத்துபட்டியில் உள்ள நம்பிக்கை மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான சிறப்பு பள்ளியில் சிவகங்கை கோட்டாட்சியர் செல்வகுமாரி தலைமையில் விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு ஆசிரியர்கள் அருண்கணேஷ், ஜெயலதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி மற்றும் அரசு பள்ளிகளில் பொங்கல்விழா நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி ஆட்சிக்குழு துணைத் தலைவர் சகுந்தலைராஜன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ஆறுமுகராஜன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கேப்டன் ஜெயக்குமார் வரவேற்றார். சுயநிதி பாட பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராஜமாணிக்கம், கல்லூரி துணை முதல்வர் சூசைமாணிக்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் 19 துறைகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் தனித்தனியாக பொங்கல் வைத்து வழிபட்டனர். மாணவிகளின் கோலாட்டம், கும்மியாட்டம், நாட்டுப்புற பாடல்கள் ஆகிய நிகழ்ச்சியும் தொடர்ந்து மஞ்சுவிரட்டு காளைக்கு வேட்டித் துண்டு அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் சிலம்பாட்டம், கயிறு இழுக்கும் போட்டி, உறியடித்தல் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவிற்கு தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைமைஆசிரியர் சிவசைலம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் முத்துப்பாண்டி நன்றி கூறினார்.

திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளித் தாளாளர் எஸ்.எம்.பழனியப்பன் தலைமை தாங்கினார். பள்ளிச் செயலர் குணாளன் முன்னிலை வகித்தார். விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதேபோல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் விழா பள்ளிக் குழுத் தலைவர் காசிவிஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. பள்ளி செயலர் அழகு மணிகண்டன் முன்னிலை வகித்தார். விழாவில் பள்ளி தலைமையாசிரியை வள்ளியம்மை உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து கோலமிடுதல், சிலம்பம், கயிறு இழுக்கும் போட்டி உள்பட பல போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூர் யூனியன் அலுவலகத்தில் அதன் தலைவர் சண்முகவடிவேல் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், மேலாளர் செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள், ஊராட்சி செயலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருப்பத்தூர் அருகே உள்ள புதுகாட்டம்பூரில் உள்ள முத்தையா மெமோரியல் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற பொங்கல் விழாவில் கல்லூரி நிர்வாகி காசிநாதன் தலைமை தாங்கினார். கல்லூரி ஒருங்கிணைப்பாளர் நிரஞ்சன், ஆசிரியர்கள் பாலசுப்பிரமணியன், விமல், உமர்பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலை இலக்கிய போட்டி, நடன போட்டி ஆகியவை நடைபெற்றது.


Next Story