நாட்டின வகைகளுக்கு அச்சுறுத்தலாக திகழும் மீன்கள் வளர்க்க தடை கலெக்டர் ரத்னா எச்சரிக்கை


நாட்டின வகைகளுக்கு அச்சுறுத்தலாக திகழும் மீன்கள் வளர்க்க தடை கலெக்டர் ரத்னா எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 Jan 2020 11:00 PM GMT (Updated: 16 Jan 2020 3:26 PM GMT)

நாட்டின மீன்களுக்கு அச்சுறுத்தலாக திகழும் மீன்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் ரத்னா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரியலூர்,

சுற்றுச்சூழலுக்கும், நம்நாட்டின் நாட்டின மீன்களுக்கும் அச்சுறுத்தலாக திகழும் தேளி, மயிரை, மயிலை, கெளுத்தி இன மீன்கள் வளர்ப்பதை அரசு தடை செய்துள்ளது. இம்மீன்களை உடனடியாக அழித்திட தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு ஆணை வெளியிட்டுள்ளது. சட்ட விரோதமாக இம்மீன்கள் வளர்க்கப்படுவதை கண்டறிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் நீர்நிலைகளில் உள்ள அனைத்து நீர்வாழ் உயிரினங்களையும் இரையாக உண்ணும் தன்மைக்கொண்டது. பாரம்பரிய மீன்கள் மற்றும் வளர்ப்பு மீன்களையும் அவற்றின் முட்டைகளையும் முற்றிலும் இவை அழித்துவிடும்.

ஆப்பிரிக்க ரக...

மேலும், இந்த மீன் இனம் காற்றில் உள்ள பிராணவாயுவை சுவாசிக்கும் தன்மையும், மிக குறைந்த ஆழம் உள்ள நீர்நிலைகளும் இனப்பெருக்கம் செய்யும் தன்மையும் உடையது. இந்த மீன்கள் பாரம்பரிய உள்நாட்டு கெளுத்தி மீன்களுடன் இனப்பெருக்கம் மேற்கொண்டு அவற்றின் மரபியலை சிதைத்து ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் பல்பெருக்கம் அடையக்கூடிய வல்லமை உடையது. மழை மற்றும் வெள்ள காலங்களில் இந்த மீன் இனங்கள் வளர்ப்பு செய்யும் குளங்களிலிருந்து தப்பி வெளியேற வாய்ப்பு உள்ளதால், தப்பிச் செல்லும் மீன்கள் உள்நாட்டு நீர்நிலைகளில் மற்ற பாரம்பரிய மீன்களை முற்றிலும் அழித்து பல்பெருக்கம் அடைந்து ஒரு காலக்கட்டத்தில் அனைத்து நீர்நிலைகளிலும் இந்த மீன்களை தவிர பிற மீன்கள் இல்லாத நிலை உருவாக்கும்.

முற்றிலும் அழிக்க நடவடிக்கை

இதனால் உள்நாட்டு மீன்வளம் அழிக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகளால் தடைசெய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது குற்றமாகும். இது தொடர்பாக புகார்கள் ஏதேனும் வந்தால், தேசிய பசுமை தீர்ப்பாய ஆணையின்படி, குளத்தில், பண்ணையில் மீன்கள் முழுவதுமாக உடனடியாக அழிக்கப்படுவதுடன் முற்றிலும் அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்களும் இவ்வகை மீன்கள் வாங்க வேண்டாம் எனக்கேட்டுக் கொள்ளப்படுகிறது. மீன்வளத்துறை மற்றும் மீன்வள பல்கலைக்கழகத்தின் மூலம் பரிந்துரை செய்யப்படும் மீன் இனங்களை மட்டும் வளர்த்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story