திருச்சி காந்திமார்க்கெட் அருகே பெண் பாலியல் பலாத்காரம் லாரி டிரைவர் கைது


திருச்சி காந்திமார்க்கெட் அருகே பெண் பாலியல் பலாத்காரம் லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 16 Jan 2020 10:15 PM GMT (Updated: 16 Jan 2020 5:22 PM GMT)

திருச்சி காந்திமார்க்கெட் அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

மலைக்கோட்டை,

திருச்சி காந்திமார்க்கெட் பழைய பால்பண்ணை அருகே விஸ்வாஸ்நகர் அணுகுசாலையில் நேற்று முன்தினம் இரவு ஆட்டோ ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த ஆட்டோவில் இருந்து இறங்கிய 26 வயது பெண் அங்குள்ள ஒரு கடையின் வாசலில் மிகவும் சோர்வான நிலையில் தனியாக அமர்ந்து இருந்தார். அவரது உடையில் ரத்தக்கறை படிந்து இருந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் மற்றும் அந்த பகுதியினர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து காந்திமார்க்கெட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக காந்திமார்க்கெட் போலீசார் அங்கு சென்று அந்த பெண்ணை மீட்டு விசாரித்தனர்.

லாரி டிரைவர் கைது

விசாரணையில் அவரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. திருச்சியை சேர்ந்த அந்த பெண், ஜங்ஷன் பகுதியில் பிச்சை எடுத்து கொண்டு சுற்றி திரிந்துள்ளார். நேற்று முன்தினம் அவரை விஸ்வாஸ்நகரை சேர்ந்த லாரி டிரைவரான சதீஷ்குமார்(வயது 30) ஜங்ஷன் பகுதியில் இருந்து ஆட்டோவில் அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததும், அப்போது அவருக்கு திடீரென ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரை அங்கேயே விட்டு, விட்டு அவர் தப்பி சென்றதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சதீஷ்குமாரை கைது செய்தனர். 

Next Story