தொழிலாளர்கள் பற்றாக்குறையால் நெல் அறுவடை பணிகள் பாதிப்பு விவசாயிகள் கவலை


தொழிலாளர்கள் பற்றாக்குறையால் நெல் அறுவடை பணிகள் பாதிப்பு விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 16 Jan 2020 10:45 PM GMT (Updated: 16 Jan 2020 7:44 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

கொரடாச்சேரி,

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை, தஞ்சையில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு சீரான மழை, மேட்டூர் அணையில் இருந்து தேவைக்கேற்ற வகையில் திறந்து விடப்பட்ட தண்ணீரினால் சாகுபடி செய்யும் பரப்பளவு அதிகரித்து உள்ளது.

தற்போது திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் அறுவடை பணிகளை மேற்கொள்ள விவசாய தொழிலாளர்கள் போதுமான அளவில் இல்லை.

மாற்று தொழில்

கடந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை உள்பட பல்வேறு காரணங்களால் விவசாய பரப்பு குறைந்தது. விவசாய தொழிலாளர்களும் வேலை இழந்தனர். ஆதலால் அவர்கள் மாற்று தொழிலை தேடி திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு சென்று விட்டனர்.

மீதமுள்ளவர்களும் அருகே உள்ள சிறு நகரங்களுக்கு குறைந்த ஊதியத்தில் வேலைக்கு சென்று விட்டனர். அங்கு ஊதியம் குறைவாக இருந்தாலும் அதனை விட்டு, விட்டு விவசாய பணிகளுக்கு திரும்ப தொழிலாளர்கள் மறுக்கின்றனர்.

இவ்வாறு தொழிலாளர்கள் பற்றாக்குறையினால் அறுவடை பணிகளை செய்ய முடியாமல் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆதலால் அறுவடைக்கு முற்றிலுமாக எந்திரங்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது.

கூடுதல் சலுகை

மிக சிறிய பரப்பில் உள்ள நெல் வயல்களில் கூட அறுவடைக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொரடாச்சேரி ஒன்றியம் கமலாபுரத்தில் மழையால் பயிர்கள் சாய்ந்தன. இந்த பயிர்களில் இருந்து மீண்டும் நாற்றுகள் முளைத்துள்ளது. டெல்டாவில் பல இடங்களில் இதுபோன்ற நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இதேநிலை நீடித்தால் விவசாயம் கேள்விக்குறியாகிவிடும். எந்திரங்களை மட்டுமே நம்பி நெல் சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியாது. எனவே விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் வகையில் புதிய திட்டங்களை தீட்டி அவர்களை அரசு பாதுகாக்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு கூடுதல் சலுகைகளை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story