தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக கூறி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்


தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக கூறி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்
x
தினத்தந்தி 16 Jan 2020 11:00 PM GMT (Updated: 16 Jan 2020 9:15 PM GMT)

தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக கூறி காங்கேயம் அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காங்கேயம்,

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே நாகமநாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் வாசு(வயது 50). இவர் காங்கேயம் அருகே ஓலப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தொழிற்சாலையில் வேலை பார்த்த போது வாசு திடீரென்று மயங்கினார்.

இதை பார்த்த சக ஊழியர்கள் அதிகாலை 2 மணிக்கு அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அரசு ஆஸ்பத்திரி முற்றுகை

இது குறித்து தகவல் அறிந்ததும் நேற்று மதியம் 1 மணி அளவில் வாசுவின் மனைவி நிர்மலாதேவி மற்றும் அவரது உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் தொழிலாளி வாசுவின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடலை வாங்க மறுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) குமரேசன், காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக் டர் ரவிக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சமாதானம் அடைந்த உறவினர்கள் போராட்டத்தை கைவிட்ட னர். பின்னர் அவரது உடலை பெற்று சென்றனர். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story