வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் பார்வையாளர் பலி; 25 பேர் காயம்


வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் பார்வையாளர் பலி; 25 பேர் காயம்
x
தினத்தந்தி 18 Jan 2020 11:00 PM GMT (Updated: 18 Jan 2020 6:50 PM GMT)

அன்னவாசல் அருகே வடமலாப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் பார்வையாளர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 25 பேர் காயமடைந்தனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள வடமலாப்பூரில் பொங்கல் விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அப்பகுதி கிராமத்தினர் முடிவு செய்தனர். அதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அதற்கான பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

இதேபோல் 180 மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் 158 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு களத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து ஜல்லிக்கட்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

மிரட்டிய காளைகள்

வாடிவாசலில் முதல் காளையாக கோவில் காளைகள் அவிழ்த்து வந்து நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். அதன் பின்னர் அலங்கரிக்கப்பட்ட உள்ளூர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விராலிமலை, கீரனூர், இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளைகளில் பல காளைகள் மின்னல் வேகத்தில் சென்றன. சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை அருகில் நெருங்க விடாமல் மிரட்டின. இருப்பினும் பல காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.

பார்வையாளர் பலி

காளைகள் முட்டி தள்ளியதில் கோவில்பட்டியை சேர்ந்த சூர்யா (வயது 26). ஐ.டி.ஐ. காலனியை சேர்ந்த மகேந்திரன் (26), பாலநகரை சேர்ந்த ராமன் (29), சிப்காட்டை சேர்ந்த பாலமுருகன் (35), சூரியூரை சேர்ந்த சரவணன் (18) உள்பட மாடுபிடி வீரர்களும், பார்வையாளர்களில் எல்லைப்பட்டியை சேர்ந்த ராமலிங்கம் (37), குடுமியான்மலையை சேர்ந்த பாண்டி (24), திருக்கோகர்ணத்தை சேர்ந்த வடிவேலு (32), காளை உரிமையாளர் மெய்வழிச்சாலையை சேர்ந்த ரெத்தினமணி (33) உள்பட மொத்தம் 26 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் இதில் வடிவேலு உள்பட 10 பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி வடிவேலு பரிதாபமாக உயிரிழந்தார்.

பரிசு பொருட்கள்

ஜல்லிக்கட்டில் காளையை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் ரொக்கப்பணம், வேட்டி, குத்துவிளக்கு, சில்வர் பாத்திரங்கள் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விராலிமலை, கீரனூர், இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர்.

நிபந்தனைகளின் படி ஜல்லிக்கட்டு முறையாக நடைபெறுகிறதா என்பதை அரசு அதிகாரிகள், போலீசார் தொடர்ந்து கண்காணித்தனர். ஜல்லிக்கட்டையொட்டி புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை வடமலாப்பூர் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story