தஞ்சை மாவட்டத்தில் திடீர் மழை: நெற்பயிர்கள் சாய்ந்தன; மகசூல் பாதிக்கும் அபாயம் விவசாயிகள் கவலை


தஞ்சை மாவட்டத்தில் திடீர் மழை: நெற்பயிர்கள் சாய்ந்தன; மகசூல் பாதிக்கும் அபாயம் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 18 Jan 2020 11:00 PM GMT (Updated: 18 Jan 2020 8:32 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் திடீரென பெய்த மழையினால் சம்பா நெற்பயிர்கள் சாய்ந்ததால் மகசூல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்(தஞ்சை, நாகை, திருவாரூர்) விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் 4½ லட்சம் எக்டேரில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 35 ஆயிரம் எக்டேர் சாகுபடி நடைபெற்றது.

தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகள் தொடங்கி உள்ளன. குறிப்பாக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, தஞ்சை, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை பணிகள் மும்முரமாக நடக்கிறது.

திடீர் மழை

ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்றுகாலையில் திடீரென பலத்த மழை பெய்தது. இந்த மழை 1 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. அதன்பிறகு அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன.

அறுவடை பணிகளும் பாதிக்கப்பட்டன. அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைத்து இருந்தனர். திடீரென பெய்த மழையினால் நெல் நனைந்துவிடாமல் இருப்பதற்காக தார்பாய் கொண்டு நெல்லை மூடி வைத்து இருந்தனர். கடந்த சில ஆண்டுகளாக போதிய அளவு மழை இல்லாததாலும், காவிரியில் தண்ணீர் வராததாலும் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

விவசாயிகள் கவலை

இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வந்ததாலும், பரவலாக மழை பெய்த காரணத்தினாலும் விவசாயிகள் ஆர்வத்துடன் சம்பா, தாளடி பணியை மேற்கொண்டனர். ஆனால் இப்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நேரத்தில் மழை பெய்வதால் நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன. இதனால் மகசூல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆனால் எள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மழையினால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, அறுவடை பணி நடந்து வரும் நேரத்தில் மழை பெய்வதால் மகசூல் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. ஏற்கனவே 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் தான் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்துள்ளனர். மழை பெய்வதால் நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். நெல்லை காய கூட வைக்க முடியாது. எனவே 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். அறுவடைக்கு போதிய அளவு எந்திரங்கள் கிடைக்காததால் அறுவடை செய்ய முடியவில்லை. எனவே அறுவடை எந்திரங்கள் போதிய அளவு கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story