புதுச்சேரியில் இருந்து செஞ்சிக்கு கடத்திய ரூ.5 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் மினிவேன் டிரைவர் கைது


புதுச்சேரியில் இருந்து செஞ்சிக்கு கடத்திய ரூ.5 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் மினிவேன் டிரைவர் கைது
x
தினத்தந்தி 18 Jan 2020 10:15 PM GMT (Updated: 18 Jan 2020 9:13 PM GMT)

புதுச்சேரியில் இருந்து செஞ்சிக்கு மினிவேனில் கடத்திய ரூ.5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனர்.

விழுப்புரம்,

புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் வழியாக செஞ்சிக்கு மினிவேனில் மதுபாட்டில்கள் கடத்தி செல்லப்படுவதாக விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ஞானசேகரன் மற்றும் போலீசார் விழுப்புரம் புறவழிச்சாலை கொட்டப்பாக்கத்துவேலி என்ற பகுதியில் வாகனசோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை நிறுத்துமாறு கைகாட்டியுள்ளனர். ஆனால் போலீசாரை கண்டதும் மினிவேன் டிரைவர் நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். பின்னர் போலீசார் தங்களது வாகனத்தில் துரத்தி சென்று பிடித்தனர்.

டிரைவர் கைது

தொடர்ந்து அந்த மினிவேனை சோதனை செய்த போது, அதில் 1,680 மதுபாட்டில்கள், 150 லிட்டர் சாராயம் இருந்தது. இதையடுத்து டிரைவரிடம் விசாரித்த போது, அவர் புதுச்சேரி மாநிலம் திருக்கனூரை சேர்ந்த அய்யனார்(வயது 45) என்பது தெரியவந்தது. மேலும் இவர் புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்கள், சாராயத்தை செஞ்சிக்கு கடத்தி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அய்யனாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினிவேனையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பார்வையிட்டு, அய்யனாரிடம் விசாரணை செய்தார்.


Next Story