காஞ்சீபுரத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டமா? - போலீசார் தீவிர சோதனை


காஞ்சீபுரத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டமா? - போலீசார் தீவிர சோதனை
x
தினத்தந்தி 18 Jan 2020 10:46 PM GMT (Updated: 18 Jan 2020 10:46 PM GMT)

காஞ்சீபுரத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, 

உலக புகழ்பெற்ற காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் உள்ளே அனுமதி பெற்ற பிறகே கோவிலில் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் அனுமதி பெறாமல் சந்தேகப்படும் வகையில் கோவிலுக்குள் 2 பேர் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சதி திட்டம் தீட்டும் நோக்கத்தில் காஞ்சீபுரத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதா? அல்லது பயங்கர வாதிகள் பதுங்கி உள்ளனரா? என்பது குறித்து போலீசார் முக்கிய கோவில்களுக்கு வரும் பக்தர்களை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்கின்றனர்.

வரதராஜ பெருமாள் கோவில், காமாட்சியம்மன் கோவில், கைலாசநாதர் கோவில், ஏகாம்பரநாதர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் உள்ளே செல்லும் பக்தர்களை போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றனர். மேலும், காஞ்சீபுரத்தில் உள்ள விடுதிகளிலும் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

காஞ்சீபுரம் ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற இடங்களிலும் பயங்கர வாதிகள்இருக்கிறார்களா? என்பது பற்றியும் காஞ்சீபுரம் போலீசாரும், உளவுத்துறை போலீசாரும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story