சேலம் அருகே பயங்கரம் தொழிலாளி கழுத்தை அறுத்துக்கொலை வீடு தர மறுத்த ஆத்திரத்தில் மகன் வெறிச்செயல்


சேலம் அருகே பயங்கரம் தொழிலாளி கழுத்தை அறுத்துக்கொலை வீடு தர மறுத்த ஆத்திரத்தில் மகன் வெறிச்செயல்
x
தினத்தந்தி 19 Jan 2020 11:00 PM GMT (Updated: 19 Jan 2020 6:37 PM GMT)

சேலம் அருகே வீடு தர மறுத்த ஆத்திரத்தில் தொழிலாளியின் கழுத்தை அறுத்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

கொண்டலாம்பட்டி,

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி மேல்காடு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 62). இவர் கோலப்பொடி தயாரிக்கும் அரவை கூடத்தில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்தார். இவருடைய மனைவி வேம்பா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு பூபதி(27) என்ற மகனும், வசந்தா என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பூபதி, மோகன பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தும், அதை பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

அதன்பிறகு தந்தை வசித்த வீட்டிலேயே தனது மனைவியுடன் பூபதி வசித்து வந்தார். அப்போது தந்தைக்கும், மகனுக்கும் இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த மாதம், தனது தந்தையிடம் வீடு தருமாறு கேட்டு பூபதி தகராறு செய்துள்ளார். இதையடுத்து மகன், மருமகள் இருவரையும் வீட்டை விட்டு வெளியேறுமாறு பழனிசாமி கூறியுள்ளார். இதன்காரணமாக அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து அவர்கள் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

கழுத்தை அறுத்து கொலை

இந்த நிலையில் நேற்று காலையில் பூபதி தனது தந்தை வசிக்கும் வீட்டுக்கு வந்தார். அங்கு தனது தந்தை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினரிடம் கூறினார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று கூறினர்.

அதற்கு போலீசில் புகார் கொடுத்தால், விசாரணைக்கு அழைத்து அலைக்கழிப்பார்கள், எனவே தந்தையின் உடலை எரித்து விடலாம் என்று அக்கம்பக்கத்தினரிடம் பூபதி கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த அருகில் வசிப்பவர்கள் மற்றும் உறவினர்கள் உடனடியாக கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி, சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்த பழனிசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மகன் கைது

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மகன் பூபதியிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக மாறி, மாறி பதில் கூறினார். இதில் சந்தேகம் அடைந்து பூபதியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது தந்தையை கழுத்தறுத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

போலீசார் விசாரணையில் அவர் திடுக்கிடும் தகவல்களை கூறினார். அவர் நேற்று முன்தினம் இரவு தனது தந்தையின் வீட்டுக்கு குடிபோதையில் வந்துள்ளார். அங்கு வீட்டை தரும்படியும், சொத்தை பிரித்து தரும்படியும் கேட்டுள்ளார். அதற்கு பழனிசாமி மறுக்கவே ஆத்திரம் அடைந்த பூபதி தான் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் தந்தையின் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடிய தந்தையின் கழுத்தையும் அவர் ஆட்டை அறுப்பது போல் வெறித்தனமாக அறுத்தார். இதில் சம்பவ இடத்திலேயே பழனிசாமி இறந்து விட்டார். உடனே அங்கிருந்து வெளியேறிய அவர், அருகில் உள்ள கிணற்றில் கத்தியை வீசி விட்டு தப்பி ஓடினார். பின்னர் நேற்று காலையில் தந்தையை பார்க்க வந்தது போன்று நடித்து அவரது உடலை எரிக்க திட்டமிட்ட போது போலீசாரிடம் மாட்டிக்கொண்டதாக விசாரணையில் அவர் கூறியுள்ளார். இதையடுத்து பூபதியை போலீசார் கைது செய்தனர்.

வீடு தர மறுத்த ஆத்திரத்தில் தந்தையை மகனே கழுத்தை அறுத்துக்கொன்ற சம்பவம் சேலம் அருகே பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story