ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் 16 பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு


ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் 16 பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 19 Jan 2020 11:00 PM GMT (Updated: 19 Jan 2020 7:08 PM GMT)

தலைவாசல் அருகே ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து, 16 பவுன் நகை, ரூ.1½ லட்சம் ரொக்கத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தலைவாசல்,

தலைவாசல் அருகே வடக்கு தியாகனூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 75), ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர். இவருடைய மனைவி துளசி (64).

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் ஆத்தூர் அருகே கூலமேடு கிராமத்தில் உள்ள தனது மகள் உமா வீட்டிற்கு சென்றனர். பின்னர் நேற்று காலை 8 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்தனர்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு பீரோ திறக்கப்பட்டு துணிகள் மற்றும் பொருட்கள் கலைந்து கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 16 பவுன் நகை, ரூ.1½ லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்த சூட்கேசை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சூட்கேசை எடுத்து சென்ற மர்ம நபர்கள், விவசாயி முரளிக்கு சொந்தமான தோட்டத்தில் வைத்து சூட்கேசை திறந்து அதில் இருந்த வெள்ளிப்பொருட்களை எடுத்துள்ளனர். பின்னர் அந்த சூட்கேசை அங்கே வீசி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

அடுத்தடுத்த வீடுகளில் கைவரிசை

இதேபோல் இவரது வீட்டின் அருகில் உள்ள 2 வீடுகளிலும் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் அந்த வீடுகளிலும் கைவரிசை காட்டியது. அதன்படி அருகில் வசித்து வரும், ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் சுப்பன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரத்தை திருடினர். மேலும் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் சரவணனின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.4 ஆயிரம் மற்றும் வெள்ளி அரைஞாண் கயிற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

ஒரே நாளில் அடுத்தடுத்து 3 வீடுகளில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்று கைவரிசை காட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து 3 வீடுகளில் திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

ஏற்கனவே இந்த கிராமத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே போலீசார் இந்த கிராமத்தில் இரவு ரோந்துப்பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story