ஈரோட்டில் தேசிய வில்வித்தை போட்டி 4 மாநில மாணவ-மாணவிகள் பங்கேற்பு


ஈரோட்டில் தேசிய வில்வித்தை போட்டி 4 மாநில மாணவ-மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 19 Jan 2020 10:45 PM GMT (Updated: 19 Jan 2020 7:27 PM GMT)

ஈரோட்டில் நடந்த தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் 4 மாநில மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

ஈரோடு,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளையொட்டி “அம்மா நினைவு கோப்பை - 2020” என்ற பெயரில் தேசிய அளவிலான திறந்தநிலை வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டிக்கு ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஸ்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ., கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விளையாட்டு பல்கலைக்கழகம்

வில்வித்தை போட்டியில் இந்தியாவிலேயே வரலாறு படைக்கும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. பழைய காலத்தில் வேட்டையாடுவதற்காக வில் பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு போர் களத்தில் பயன்பட்டது. தற்போது அதை ஒரு விளையாட்டாக பின்பற்றப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா விளையாட்டு துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியை தமிழகத்தில் நடத்தி பெருமை சேர்த்தார். 2005-ம் ஆண்டு விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. அவரது வழியில் ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். 12 ஆயிரத்து 524 ஊராட்சிகள், 528 பேரூராட்சிகளில் இளைஞர்களின் திறனை வெளிப்படுத்த பயிற்சி அளிப்பதற்காக ரூ.74 கோடியே 76 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பரிசளிப்பு விழா

இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதில் 6, 8, 10, 12, 14, 17, 20 ஆகிய வயதுக்கு உள்பட்டவர்கள், 20 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என 8 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. சுமார் 350 மாணவ-மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிகாட்டினார்கள்.

வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா மாலையில் நடைபெற்றது.

இதில் ஒவ்வொரு பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக்கோப்பையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

Next Story