காட்பாடியில் பட்டப்பகலில் துணிகரம்: டாக்டர் வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகை திருட்டு


காட்பாடியில் பட்டப்பகலில் துணிகரம்: டாக்டர் வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 20 Jan 2020 10:45 PM GMT (Updated: 20 Jan 2020 5:15 PM GMT)

காட்பாடியில் பட்டப்பகலில் டாக்டர் வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காட்பாடி,

காட்பாடி பாரதிநகர் மெயின்ரோடு பகுதியில் வசிப்பவர் ரமணய்யா (வயது 63), டாக்டர். இவர் காட்பாடி-குடியாத்தம் சாலையில் கிளினிக் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி குமாரி. இவர்களின் மகள் சர்வபள்ளி, பல் டாக்டர்.

ரமணய்யா நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் காரில் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அனைவரும் இரவு வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அறைகளில் ஆங்காங்கே பொருட்கள் சிதறி கிடந்தன. அலமாரியை உடைத்து அதில் வைத்திருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து 30 பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர். இதுகுறித்து ரமணய்யா காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன், இன்ஸ்பெக்டர் புகழ் மற்றும் போலீசார் திருட்டு நடந்த வீட்டிற்கு சென்று பார்வையிட்டனர். இதுதொடர்பாக ரமணய்யா குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகைகளை சேகரித்தனர்.

இந்த திருட்டு குறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் டாக்டர் வீட்டில் நகை திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், டாக்டரின் நடவடிக்கையை நன்கு நோட்டமிட்ட மர்மநபர்கள் பட்டப்பகலில் வீட்டின் பின்பக்கம் வழியாக வந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். கைரேகை மற்றும் தடயங்கள் கிடைக்காமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய் பொடியை மர்மநபர்கள் தூவி சென்றுள்ளனர். வீடு மற்றும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் திருட்டில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கண்டறிய முடியவில்லை. காட்பாடி பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என்று தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். மேலும் அவர்களை விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

Next Story