குமாரபாளையத்தில் வாலிபரிடம் வழிப்பறிக்கு முயன்ற அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் கைது


குமாரபாளையத்தில் வாலிபரிடம் வழிப்பறிக்கு முயன்ற அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 20 Jan 2020 11:00 PM GMT (Updated: 20 Jan 2020 5:32 PM GMT)

குமாரபாளையத்தில், கத்தி முனையில் வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையம்,

குமாரபாளையம் அண்ணா நகரில் வசிப்பவர் சித்திக் (வயது 25). டயர் ரீடிரேடிங் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் இவர் குமாரபாளையம் - எடப்பாடி சாலை காய்கறி மார்க்கெட் அருகே வரும்போது, இவரை வழிமறித்த 4 பேர் பணத்தை கேட்டு மிரட்டினர். சித்திக் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

அப்போது அந்த 4 பேரும் கத்தி முனையில் மிரட்டி, சித்திக்கின் சட்டை பாக்கெட்டில் பணத்தை தேடியுள்ளனர். சித்திக் சத்தம் போட தொடங்கியதும் அவர்கள் கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை கண்ணில் தூவ முயற்சிக்க, அவர் அதனை தடுத்துள்ளார். இதற்கிடையில் சித்திக்கின் சத்தத்தை கேட்டு அங்கு சிலர் வருவதை பார்த்ததும் அந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

4 பேர் கைது

இதுகுறித்து சித்திக் குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவேரி நகர் சோதனை சாவடி அருகே 4 பேர் நிற்பதை கண்ட போலீசார், அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

இதில் அவர்கள் பெரந்தார் காடு பகுதியை சேர்ந்த சக்கரை கார்த்தி என்கிற கார்த்தி (33), சின்னப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த அண்ணன்-தம்பிகளான கோபால் (34), குரங்கு பெருமாள் என்கிற பெருமாள் (33), குப்பாண்டபாளையம் ஜே.ஜே. நகரை சேர்ந்த சவுந்தர்ராஜ் (27) என்பதும், இவர்கள் 4 பேரும் சித்திக்கிடம் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட முயன்றவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து, திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி சேலம் சிறையில் அடைத்தனர்.

Next Story