குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான பேரணி பிப்ரவரி 22-ந் தேதிக்கு தள்ளிவைப்பு தொல்.திருமாவளவன் அறிவிப்பு


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான பேரணி பிப்ரவரி 22-ந் தேதிக்கு தள்ளிவைப்பு தொல்.திருமாவளவன் அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Jan 2020 11:00 PM GMT (Updated: 20 Jan 2020 7:14 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான பேரணி பிப்ரவரி மாதம் 22-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக திருச்சியில் தொல்.திருமாவளவன் அறிவித்தார்.

திருச்சி,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘தேசம் காப்போம்’ என்ற தலைப்பில் திருச்சியில் பேரணி நடத்துவது தொடர்பாக மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்சியில் ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு. நாட்டை ஆளும் அரசு மத சார்பற்றதாக இருக்க வேண்டும். எந்த மதத்திற்கும், மொழிக்கும், இனத்திற்கும் ஆதரவாகவும், எதிராகவும் இருக்கக்கூடாது. குடியுரிமை திருத்த சட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது உள்ள வெறுப்பை தான் இவர்கள் காட்டுகின்றனர். அம்பேத்காரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தை புரிந்து கொள்ள நன்கு அறிவு வேண்டும். ஆனால் மத்தியில் உள்ள இவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது.

போராட்டம்

பிரதமர் மோடி, அமித்ஷாவின் பின்னால் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் உள்ளது. அவர்கள் 2 பேரையும் ஆர்.எஸ்.எஸ். தான் இயக்குகிறது. அரசியலமைப்பு சட்டம் என்பது சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் என்ற கொள்கையில் உருவாக்கப்பட்டது. ஆனால் இதனை மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மத உணர்வையையும், வெறியையும் தூண்டி வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ள பா.ஜ.க.வினர் முயற்சிக்கின்றனர். இந்தியாவிற்கு இந்து தேசம் என்று பெயர் வைக்க வேண்டும் என்பது அவர்களது இலக்கு. இந்துக்களை ஒன்று திரட்டி ஒரே கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்குகின்றனர். இந்த சட்டத்தை எதிர்த்து முஸ்லிம்கள் மட்டும் போராட வேண்டும் என்பது இல்லை. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் போராட்டம் நடத்த வேண்டும். இந்த சட்டத்தை திரும்ப பெறும்வரை போராட வேண்டும்.

பேரணி

திருச்சியில் தேசம் காப்போம் என்ற தலைப்பில் பிப்ரவரி மாதம் 15-ந் தேதி பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பேரணி பிப்ரவரி 22-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அன்றைய தினம் இந்தியாவையே திரும்பி பார்க்கும் வகையில் இந்த பேரணி அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வணிகர் அணி மாநில துணை செயலாளர் ராஜா, அச்சு ஊடக மைய மாநில துணை செயலாளர் ரமேஷ்குமார், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில செயலாளர் பிரபாகரன், மாநில நிர்வாகி அரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story