காடையாம்பட்டி அருகே கே.மோரூரில் மயான வசதி கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


காடையாம்பட்டி அருகே கே.மோரூரில் மயான வசதி கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 20 Jan 2020 10:45 PM GMT (Updated: 20 Jan 2020 7:52 PM GMT)

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காடையாம்பட்டி அருகே உள்ள கே.மோரூர் பகுதி பொதுமக்கள் மயான வசதி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

மொத்தம் 285 மனுக்கள் பெறப்பட்டன. இதில் தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.

மயான வசதி

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள கே.மோரூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், ‘எங்கள் கிராமத்தில் அனைத்து சமூகத்தினரும் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய போதுமான மயான வசதி இதுவரை இல்லை.

மேலும் இறந்தவர்களின் உடலை ஆற்றங்கரையில் அடக்கம் செய்து வந்தோம். ஆனால் மழைக் காலங்களில் ஆற்றில் தண்ணீர் வருவதால் இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியவில்லை. மேலும் ஏற்கனவே அடக்கம் செய்த இடத்திலேயே அடக்கம் செய்வதால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. ஆகையால் விரைவில் மயான வசதி செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.

மின் இணைப்பு

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் ராமனிடம் கொடுத்துள்ள மனுவில், ‘எங்கள் பகுதியில் உள்ள ஓடையின் குறுக்கே அரசு புறம்போக்கு நிலத்தில் ஒருவர் கிணறு வெட்டி உள்ளார். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் அதை தடுத்து நிறுத்தினர்.

இந்தநிலையில் அந்த கிணற்றுக்கு மின் இணைப்பு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே அந்த கிணற்றுக்கு மின் இணைப்பு வழங்க கூடாது. மேலும் ஓடையின் குறுக்கே கிணறு வெட்டியது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

ரத்து செய்ய வேண்டும்

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி சத்யா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், ‘எங்கள் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை இந்துக்களின் மயானமாக பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தோம். இந்தநிலையில் அந்த மயானத்தை வேறு ஒரு சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Next Story