மெலட்டூர் பகுதியில், மழையால் 100 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் விவசாயிகள் கவலை


மெலட்டூர் பகுதியில், மழையால் 100 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 20 Jan 2020 11:00 PM GMT (Updated: 20 Jan 2020 8:38 PM GMT)

மெலட்டூர் பகுதியில் மழையால் 100 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மெலட்டூர்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மெலட்டூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மழை பெய்தது. இதனால் மெலட்டூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த 100 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

பல மாதங்கள் பாடுபட்டு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நெற்பயிர்கள் சேதம்

இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

நரியனூர், கரம்பை, நரசிங்கமங்களம், ஏர்வாடி, திருநாவுநத்தம், கள்ளர்நத்தம், அத்துவானப்பட்டி, காட்டுகுறிச்சி ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. தற்போது நெற்பயிர்களை அறுவடை செய்ய அறுவடை எந்திரங்கள் தட்டுப்பாடு மற்றும் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததாலும் பயிர்களை அறுவடை செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் நெற்பயிர்கள் தரையில் சாய்ந்து நீரில் மூழ்கி உள்ளது. ஏற்கனவே நெற்பயிர்கள் புகையான் நோயால் பாதிக்கப்பட்டு மகசூல் பாதிப்பு ஏற்படும் என அச்சத்தில் இருந்து விவசாயிகளுக்கு அறுவடை நேரத்தில் பெய்த திடீர் மழையில் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது பேரிடியாக அமைந்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சம் இன்றி உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story