திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் திராவக சேமிப்பு கிடங்கு அப்புறப்படுத்த கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் திராவக சேமிப்பு கிடங்கு அப்புறப்படுத்த கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 20 Jan 2020 11:00 PM GMT (Updated: 20 Jan 2020 8:46 PM GMT)

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் உள்ள திராவக சேமிப்பு கிடங்கை அப்புறப்படுத்தக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அவினாசி தாலுகா தெக்கலூரை சேர்ந்த சென்னியப்பன் அளித்த மனுவில், எனக்கு தெக்கலூரில் 1¼ ஏக்கர் நிலம் உள்ளது. எனது நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து பட்டா மாறுதல் செய்து அபகரித்துள்ளனர். 18-க்கும் மேற்பட்டவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். பத்திரப்பதிவுத்துறையினர் விசாரித்து போலி ஆவணங்கள் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் அவினாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள போலி ஆவணங்களை அப்புறப்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

வாடகை கார் ஓட்டுனர்கள்

திருப்பூர் விஜயாபுரம் பகுதியை சேர்ந்த வாடகைகார் ஓட்டுனர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அதில் சொந்த வாகனத்தை சிலர் வாடகைக்கு இயக்குகிறார்கள். இதனால் உரிய அனுமதியோடு வாடகைக்கு கார் ஓட்டும் எங்களுக்கு பெரிதும் சிரமம் ஏற்பட்டுள்ளது. கருப்புசாமி என்பவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது இன்று(நேற்று) காலை வாடகைக்கார் ஓட்டுனரான சக்திவேல் என்பவர் மீது கருப்புசாமி தனது காரால் மோதி விட்டு சென்றுள்ளார். இதில் சக்திவேலுவுக்கு கால் முறிந்து விட்டது. அவர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே கருப்புசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சொந்த வாகனத்தை வாடகைக்கு ஓட்டுவதை தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

திராவக சேமிப்பு கிடங்கு

திருப்பூர் இடுவம்பாளையம் முருகம்பாளையத்தை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகிறோம். எங்கள் குடியிருப்புக்கு அருகில் அங்கன்வாடி மையம் உள்ளது. தற்போது எங்கள் பகுதியில் திராவக சேமிப்பு கிடங்கு அமைத்து, சாயப்பட்டறைகளுக்கு பயன்படுத்தும் திராவகத்தை லாரிகளில் கொண்டு வந்து கேன்களில் பிடித்து விற்பனை செய்கிறார்கள். இதனால் கடுமையான நெடி வீசுகிறது. சில நேரங்களில் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட கிடங்கை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

மின்வாரிய அலுவலகங்கள்

ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை சார்பில் அளித்த மனுவில், கொடுவாய் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். திருப்பூர்-தாராபுரம் மெயின் ரோட்டில் பள்ளி இருப்பதால் வாகனங்கள் வேகமாக செல்கிறது. எனவே பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. எனவே கொடுவாய் அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்பு ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

திருப்பூர் மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், குன்னத்தூர் உபகோட்ட மின்வாரிய அலுவலகங்கள், துணை மின்நிலையங்கள் திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் இணைக்கப்படாமல் உள்ளது. ஈரோடு மின்பகிர்மான வட்டத்தில் உள்ளது. இதனால் மக்கள் ஈரோடு செல்ல சிரமம் அடைந்துள்ளனர். எனவே திருப்பூர் மின்பகிர்மான வட்டத்துடன் குன்னத்தூர் உபகோட்ட மின்வாரிய அலுவலகங்களை இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

கால்நடை வாரச்சந்தை

ஆதித்தமிழர் பேரவை சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், குறிச்சிப்புதூர் ஊராட்சி பகுதியில் 55 ஆதிதிராவிட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

திருப்பூர் பொல்லிகாளிபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், திருப்பூர் கால்நடை வாரசந்தையை நகரை விட்டு வெளியே கிராமப்புறத்துக்கு மாற்ற வேண் டும் என்று கூறியிருந்தனர்.

Next Story