தாளவாடி அருகே தலமலை சாலையோரத்தில் படுத்திருந்த புலி: நேரில் பார்த்த கிராமமக்கள் அதிர்ச்சி


தாளவாடி அருகே தலமலை சாலையோரத்தில் படுத்திருந்த புலி: நேரில் பார்த்த கிராமமக்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 20 Jan 2020 11:01 PM GMT (Updated: 20 Jan 2020 11:01 PM GMT)

தாளவாடி அருகே தலமலை சாலையோரத்தில் புலி படுத்திருந்தது. அதை நேரில் பார்த்த கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

தாளவாடி,

தமிழகத்தில் சத்தியமங்கலம், முதுமலை, ஆனைமலை, களக்காடு, முண்டந்துறை என 4 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இதில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அதிக பரப்பளவுள்ள வனப்பகுதியை உள்ளடக்கியுள்ளது. 1,411 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள இந்த புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், ஆசனூர் என 2 வனக்கோட்டங்களும், சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், விளாமுண்டி, கடம்பூர், தலமலை, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரஹள்ளி என 10 வனச்சரகங்களும் உள்ளன.

2013-ம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டபின் சத்தி வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பவானிசாகர் வனச்சரகத்தில் உள்ள மாயாறு ஆற்றுப்படுகை வனப்பகுதி, தெங்குமரஹாடா வனப்பகுதி, தலமலை, கேர்மாளம், ஜீரஹள்ளி மற்றும் பண்ணாரி வனப்பகுதிகளில் புலிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

தாளவாடி அருகே உள்ள தலமலை வனப்பகுதியில் திப்புசுல்தான் சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் அடிக்கடி புலிகள் நடமாடுவதாக மலைகிராம மக்கள் கூறுகிறார்கள்.

இந்தநிலையில் தலமலை அருகே திப்புசுல்தான் சாலையை ஒட்டிய வனப்பகுதியில் ஒரு மரத்துக்கு அடியில் புலி ஒன்று ஹாயாக படுத்திருந்தது. அது மக்கள் நடமாடும் பகுதி. அந்த வழியாக சென்றவர்கள் புலி படுத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் புலி அங்கேயே படுத்திருந்தது. மக்களை நோக்கி ஓடிவரவில்லை. ஆனால் பயத்தில் கிராமமக்கள் அலறி அடித்து ஊருக்குள் ஓடிவிட்டார்கள்.

இதுபற்றி வனத்துறை அதிகாாிகள் கூறும்போது, தலமலை அருகே திப்புசுல்தான் சாலையில் அவ்வப்போது புலிகள் நடமாடுகின்றன. கிராமமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்கள்.


Next Story