‘தி.மு.க.வில் வாரிசு அரசியலை மு.க.ஸ்டாலின் ஊக்குவிக்கிறார்’ முதல்-அமைச்சர் கடும் தாக்கு


‘தி.மு.க.வில் வாரிசு அரசியலை மு.க.ஸ்டாலின் ஊக்குவிக்கிறார்’ முதல்-அமைச்சர் கடும் தாக்கு
x
தினத்தந்தி 21 Jan 2020 11:15 PM GMT (Updated: 21 Jan 2020 7:30 PM GMT)

தி.மு.க.வில் வாரிசு அரசியலை மு.க.ஸ்டாலின் ஊக்குவிக்கிறார் என்று சேலம் மாவட்டம், ஆத்தூரில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

சேலம்,

அ.தி.மு.க. நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த தின விழா, விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி கொண்டாட்டத்தை குறிக்கும் வகையிலும் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம், ஆத்தூர் ராணிப்பேட்டையில் நேற்று இரவு நடைபெற்றது.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முதல்-அமைச்சரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் சாதாரண மனிதரையும் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் என நாட்டை ஆளும் தகுதி உடையவராக தேர்வு செய்து அழகு பார்த்தவர் எம்.ஜி.ஆர். ஆவார். அ.தி்.மு.க.வில் மட்டுமே சாதாரண தொண்டரும் உயர்ந்த பதவிகளுக்கு வரமுடியும் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டாகும்.

எம்.ஜி.ஆர் திரைப்பட பாடல்கள்

ஆனால் தி.மு.க.வில் மிட்டா, மிராசுதாரர்கள், தொழில் அதிபர்கள் மட்டுமே உயர்ந்த பதவிகளுக்கு வரமுடியும் என்ற சூழல் இருந்து வருகிறது. எம்.ஜி.ஆர் தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே உழைத்தார். அவரது திரைப்படங்கள், அதில் இடம்பெற்ற பாடல்களும் நாட்டுப்பற்று, நல்லொழுக்கம் போன்றவற்றை போதித்தன. அவரது பாடல்களை இப்போது கேட்டாலும் உயிரோட்டம் உள்ள பாடல்களாகவே நிலைத்து உள்ளன. (அப்போது அவர் எம்.ஜி.ஆர். நடித்த பாடல்களை பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்)

1972-ம் ஆண்டில் தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். விலகி, அ.தி.மு.க. என்ற புதிய இயக்கத்தை தொடங்கினார். அன்றில் இருந்து இன்று வரை, அ.தி.மு.க. வெற்றி நடைபோடுகிறது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின், அ.தி.மு.க. இயக்கம் பிரிந்து விடும் என்று கருணாநிதி நினைத்தார். அப்போது நமது கட்சி இரண்டாக பிரிந்தாலும், ஜெயலலிதா இந்த இயக்கத்தை ஒன்றாக இணைத்து 1991-ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்துக்கு கட்சியை கொண்டு வந்தார்.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர். 10½ ஆண்டுகளும், ஜெயலலிதா 15 ஆண்டுகளும் ஆட்சி செய்து தமிழகத்திற்கு பல்வேறு நன்மைகளை செய்தனர். அவர்களின் தொடர்ச்சியாக நானும் கடந்த 3 ஆண்டுகளாக மறைந்த தலைவர்களின் வழியில் ஆட்சி நடத்தி வருகிறேன்.

30 ஆண்டுகள்

தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது அ.தி.மு.க. மட்டுமே ஆகும். இந்த இயக்கத்தில் நான் மட்டும் முதல்-அமைச்சர் இ்ல்லை. இங்கு கூடியிருக்கும் அனைவருமே முதல்-அமைச்சர் தான். எடப்பாடி பழனிசாமி மட்டுமே முதல்-அமைச்சர் என்று மு.க.ஸ்டாலின் நினைத்து கொண்டிருக்கிறார். ஆனால் ஓராயிரம் பழனிசாமிகள் இங்கு இருக்கிறார்கள். நான் பதவியில் இல்லாவிட்டாலும், சாதாரண தொண்டர் கூட அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சராக முடியும்.

ஆனால் மு.க.ஸ்டாலினின் முதல்-அமைச்சர் கனவு ஒரு போதும் பலிக்காது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க. ஆட்சி 10 நாட்களோ? ஒரு மாதமோ? அல்லது பட்ஜெட் மானிய கோரிக்கை வரையில் தாக்குபிடிக்குமோ? என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆரூடம் கூறி வந்தார். ஆனால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் எண்ணங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றும் வகையில், தமிழகத்தில் சிறப்பான முறையில் அ.தி.மு.க. ஆட்சி நடந்து வருகிறது.

வாரிசு அரசியல்

ஆனால் தி.மு.க.வில் வாரிசு அரசியலை மட்டுமே முன்னெடுத்து செல்கிறார்கள். கருணாநிதிக்கு பிறகு அவரது மகன் மு.க.ஸ்டாலின் தலைவராகி உள்ளார். தற்போது அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராகி உள்ளார். இந்த பதவியை 70 வயது வரை தான் வைத்துக்கொண்டு, அதன்பிறகு தனது மகனுக்கு அந்த பதவியை மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளது தி.மு.க.வில் வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாக உள்ளது. ஆனால் அ.தி.மு.க.வில் யார் கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்கள் உயர்ந்த பதவிக்கு வரமுடியும்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை கூறி மக்களை நம்ப வைத்து தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அதன்பிறகு நடந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலினிடம் ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்டதற்கு ஆட்சி, அதிகாரத்தில் நாங்கள் இல்லை என்று கூறுகிறார். இது மக்களை ஏமாற்றும் செயல் இ்ல்லையா?

நகைக்கடன், விவசாய கடன்கள் தள்ளுபடி என்ற கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலிலும் தி.மு.க. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற முடிந்தது.

கூட்டணி தர்மம்

தற்போது நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களை பிடித்துள்ளது. கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் இயக்கம் அ.தி.மு.க. ஆகும். அதே நேரத்தில் தி.மு.க.வில் கூட்டணி தர்மத்தை எப்போதும் கடைபிடிப்பது இல்லை.

தி.மு.க. கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, வாக்கு வங்கி இல்லாத கட்சி என்று காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்தார். இதை எல்லாம் பார்க்கும் போது நூற்றாண்டு கண்ட காங்கிரஸ் கட்சியின் நிலை பரிதாபமாக போய் விட்டது. இதை தான் அமைச்சர் ஜெயக்குமார் உடைந்த கண்ணாடி ஒட்டாது என்று விமர்சனம் செய்தார்.

அதே நேரத்தில் கூட்டணி தர்மத்தை அ.தி.மு.க. கடைபிடித்தது. இதற்கு உதாரணம் கூற வேண்டும் என்றால் சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவியை கூட்டணிக்கு விட்டுக்கொடுத்ததை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். கூட்டணியில் குறைந்த இடங்களில் பா.ம.க. உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருந்தாலும், கூட்டணி தர்மப்படி பா.ம.க.வுக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவியை அ.தி.மு.க. விட்டுக்கொடுத்தது.

மத்திய அரசு விருது

தமிழகத்திற்கு சிறந்த ஆளுமைத்திறனுக்கான விருதை மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்று ஜெயலலிதா லட்சியமாக கொண்டு இருந்தார். தற்போது அவரது கனவை நாம் நிறைவேற்றி உள்ளோம்.

வேளாண்மை, கல்வி, சுகாதாரம், சமூக நலத்துறை, போக்குவரத்து போன்ற துறைகளில் பல்வேறு தேசிய விருதுகளை தமிழகம் பெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. ஆனால் இங்கு சட்டம், ஒழுங்கு சரியில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார்.

சமீபத்தில் கன்னியாகுமரியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்று அவர் கூறினார். அந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபர்களை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

ஆனால் தி.மு.க. ஆட்சியில் இதுபோன்று ஒரு சம்பவம் நடந்தது. தென்காசியில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் என்பவர் கூலிப்படையினரால் அரிவாளால் வெட்டப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவர் தண்ணீர், தண்ணீர் என்று தவித்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் சென்ற தி.மு.க. அமைச்சர்கள் 2 பேர் அந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் சென்ற துயரமான சம்பவம் நிகழ்ந்தது. இதெல்லாம் மறக்க முடியுமா? தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை யார் கெடுக்க நினைத்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசிய மக்கள் தொகை பதிவேடு

தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பால் தமிழகத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. குறிப்பாக சிறுபான்மை மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. ஆனால் உண்மைக்கு புறம்பான தகவல்களை தி.மு.க. கூட்டணியினர் பரப்பி வருகிறார்கள். இதை யாரும் நம்ப வேண்டாம்.

இந்த விஷயத்தில் மத்திய அரசு ஆதார் எண், செல்போன் எண், பெற்றோர் எங்கு வசித்தார்கள்? என்ற விவரங்களை இணைக்க கூறுகிறார்கள் என்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் இதில் பெற்றோர் எங்கு வசித்தார்கள் என்ற விவரத்தை விருப்பப்பட்டால் மட்டுமே தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது.

சிறுபான்மையினருக்கு அரணாக இருக்கும்

இந்த விஷயத்தில் சிறுபான்மையினருக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் அ.தி.மு.க. உறுதுணையாக அரணாக இருக்கும் என்பதை உறுதிபட தெரிவித்து கொள்கிறேன். நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெறும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இந்த விழாவில், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, சின்னதம்பி, மருதமுத்து, மனோன்மணி, சித்ரா மற்றும் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவரும், சேலம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான இளங்கோவன், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளாக பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் ஆத்தூர் பழைய பேட்டை பகுதியை சேர்ந்த முஸ்தபா-சுல்தானா தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு சனா என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் சூட்டினார்.

Next Story