அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வெட்டிக்கொலை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு


அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வெட்டிக்கொலை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 22 Jan 2020 11:15 PM GMT (Updated: 22 Jan 2020 5:19 PM GMT)

கீரனூர் அருகே தந்தை-மகன் கொலைக்கு பழிக்கு பழிவாங்கும் வகையில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரை அடுத்து உள்ள நமணராயசமுத்திரத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 51). அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலராக இருந்தார். ரியல்எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவர் காரப்பட்டையை சேர்ந்த தொழிலதிபர் வீராச்சாமி (70) என்பவருக்கு திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் அருகே ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் உள்ள நிலம் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த இடத்தை நெடுஞ்சாலை துறையினர் சாலை பணிக்காக எடுத்துக்கொண்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த வீராச்சாமி, தனது மகன் முத்துவுடன் (30) சென்று மூர்த்தியிடம் முறையிட்டனர். நிலத்திற்கு கொடுத்த பணத்தை திரும்பி தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் மூர்த்தி பணத்தை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், சமரசம் பேசுவதற்காக களமாவூரில் உள்ள தனது தோட்டத்திற்கு, வீராச்சாமியை வருமாறு மூர்த்தி அழைத்துள்ளார்.

இதையடுத்து வீராச்சாமி, அவரது மகன் முத்து ஆகிய 2 பேரும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி மூர்த்தி சொன்ன இடத்துக்கு சென்றுள்ளனர். இவர்களுடன் உறவினர்கள் சிலரும் சென்றுள்ளனர். அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் வீராச்சாமி, முத்து ஆகிய 2 பேரையும் வயலில், ஓட ஓட விரட்டி மூர்த்தி தரப்பினர் வெட்டிக்கொலை செய்தனர். இந்த வழக்கில் மூர்த்தி முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, அவருடன் சேர்த்து 10 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் கைதான மூர்த்தி ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

வெட்டிக் கொலை

இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு திருச்சி-கீரனூர் சாலையில் களமாவூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள டீக்கடையில் மூர்த்தி டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், திடீரென மூர்த்தியை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் மூர்த்தியின் இடது கை துண்டானது. மேலும் முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயத்துடன் ரத்தம் வடிந்த நிலையில் சரிந்து கீழே விழுந்தார். பின்னர் சம்பவ இடத்திலேயே மூர்த்தி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேரும், அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த கொலை சம்பவத்தை பார்த்ததும் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். தொடர்ந்து அவர்கள் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பழிக்கு பழியாக...

இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்றவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர். பின்னர் மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரை கொன்ற 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் தந்தை-மகன் கொலைக்கு, பழிக்கு பழிவாங்கும் வகையில் மூர்த்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story