போலீஸ் நிலையத்தில் கைதி சுட்டுக் கொலை: ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் சப்-இன்ஸ்பெக்டர் மனு


போலீஸ் நிலையத்தில் கைதி சுட்டுக் கொலை: ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் சப்-இன்ஸ்பெக்டர் மனு
x
தினத்தந்தி 22 Jan 2020 10:30 PM GMT (Updated: 22 Jan 2020 10:13 PM GMT)

எஸ்.பி.பட்டினம் போலீஸ் நிலையத்தில் கைதி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி சப்-இன்ஸ்பெக்டர், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

மதுரை,

நான் கடந்த 2014-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தேன். எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த அல்லா பிச்சை மகன் செய்யது முகம்மது (வயது 24). மெக்கானிக்கான இவர் மீது திருட்டு புகார் வந்தது. இது குறித்து விசாரிக்க எஸ்.பி.பட்டினம் போலீசார் 14.10.2014 அன்று செய்யது முகம்மதுவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். விசாரணை அதிகாரியான நான், அவரிடம் விசாரணை நடத்தியபோது, கத்தியால் என்னை கொலை செய்யும் நோக்கத்தில் செய்யது முகம்மது தாக்க வந்தார். நான், என்னை தற்காத்து கொள்வதற்காக என்னிடம், இருந்த துப்பாக்கியால் அவரை சுட்டேன். இதில் சையது முகம்மதுவின் இடது மார்பில் குண்டு பாய்ந்தது. அவரை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது, அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.

கொலை வழக்கு

இது குறித்து எஸ்.பி.பட்டினம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் என் மீது கொலை வழக்குபதிவு செய்து விசாரிக்க வலியுறுத்தி செய்யது முகம்மது தரப்பினர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கை ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை செய்து, என் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து நான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டேன். ஜாமீனில் வெளியே வந்த நான், பணியிடை நீக்கத்தை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். எனது கோரிக்கையை கோர்ட்டு அனுமதித்தது. அதனால் மீண்டும் பணியில் சேர்ந்தேன். தொடர்ந்து மதுரை மாவட்ட குற்றப்பிரிவு ஆவணக்காப்பகத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தேன்.

ஆயுள் தண்டனை

இதற்கிடையே என் மீதான கொலை வழக்கை விசாரித்த ராமநாதபுரம் முதன்மை மாவட்ட கோர்ட்டு, எனக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. அபராதத் தொகையை என்னிடம் வசூலித்து, செய்யது முகம்மதுவின் தாயாரிடம் வழங்கும்படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் சமீபகாலமாக பணியும் இல்லாததாலும், எனது குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளதாலும், அபராதத் தொகையை கட்ட இயலாத சூழ்நிலையில் உள்ளேன்.

விடுவிக்க வேண்டும்

மேலும், பணியில் இருந்த என்னை கொலை செய்யும் நோக்கத்துடன் செய்யது முகம்மது கத்தியால் தாக்க வந்ததால்தான் நான் துப்பாக்கியால் சுட நேர்ந்தது. மேலும் என் மீது வேறு எந்த வித புகார்களும் இல்லை. எனவே இந்த வழக்கில் இருந்து என்னை விடுதலை செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ராஜா, புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விசாரணையை ஒத்திவைத்தனர்.

Next Story