ஆட்டோ டிரைவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை


ஆட்டோ டிரைவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 23 Jan 2020 11:15 PM GMT (Updated: 23 Jan 2020 6:58 PM GMT)

திருச்சியில் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட சென்ற ஆட்டோ டிரைவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 8 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி உறையூர் மேலமின்னப்பன்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் என்கிற ஜிம் மணிகண்டன் (வயது 22). இவர் உடற்பயிற்சி கூடத்துக்கான (ஜிம்) கருவிகளை பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமாருக்கும், ஜிம் மணிகண்டனுக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதில் ஏற்பட்ட மோதலில் செந்தில்குமார், அவரது உறவினரான ஆட்டோ டிரைவர் புகழேந்தி (28) ஆகியோர் ஜிம் மணிகண்டனை அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, 23-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

போலீஸ் நிலையத்தில் கையெழுத்து

இந்த சம்பவம் தொடர்பாக உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தில்குமார், புகழேந்தி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் புகழேந்தி 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் இவர்கள் இருவரும் டிசம்பர் மாதம் 13-ந் தேதி நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தனர்.

இருவரும் தினமும் உறையூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்தனர். வழக்கம்போல் கையெழுத்து போடுவதற்காக நேற்று காலை புகழேந்தி உறையூர் போலீஸ் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். உறையூர் பெரியசெட்டிதெருவில் ஒரு திருமண மண்டபம் அருகே சென்றபோது, அவரை 8 பேர் கும்பல் திடீரென வழி மறித்தனர்.

அரிவாளால் வெட்டி படுகொலை

இதை சற்றும் எதிர்பார்க்காத புகழேந்தி மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அவரை ஓட, ஓட விரட்டி சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.

இதில் அவரது கழுத்து, கை, கால்களில் பலத்த வெட்டு காயம் விழுந்து, அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது. இந்த படுகொலை சம்பவத்தை கண்ட அந்த பகுதியினர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று புகழேந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பழிக்குப்பழி தீர்க்க...

விசாரணையில் ஜிம் மணிகண்டனை கொலை செய்ததற்கு பழிக்குப்பழி தீர்க்கவே புகழேந்தியை தீர்த்து கட்டியது தெரியவந்தது. தொடர்ந்து சம்பவ இடத்தில் கொலையாளிகள் விட்டு சென்ற அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். மேலும், கொலை நடந்த இடத்தின் அருகே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு டி-ஷர்ட், சார்ட்ஸ் அணிந்த 4 பேர் கொலை செய்து விட்டு அந்த வழியாக ஓடிச் சென்ற காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து கொலையாளிகள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story