எந்திரம் மூலம் நெல் அறுவடை: கூடுதல் வாடகை வசூலிக்கப்படுகிறதா? அதிகாரிகள் ஆய்வு


எந்திரம் மூலம் நெல் அறுவடை: கூடுதல் வாடகை வசூலிக்கப்படுகிறதா? அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 23 Jan 2020 11:00 PM GMT (Updated: 23 Jan 2020 7:31 PM GMT)

எந்திரம் மூலம் நெல் அறுவடை செய்யப்படும் இடங்களில் கூடுதல் வாடகை வசூலிக்கப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி 1 லட்சத்து 37 ஆயிரம் எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 1 லட்சம் எக்டேரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. பெரும்பாலான இடங்களில் எந்திரங்கள் மூலம் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது.

இதற்காக சேலம், ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து நெல் அறுவடை எந்திரங்கள் வந்துள்ளன. தற்போது ஒரத்தநாடு, தஞ்சை, கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், அம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனியார் நெல் அறுவடை எந்திரங்களுக்கு கூடுதலாக வாடகை வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் புகார்கள் தெரிவித்தனர்.

வாடகை நிர்ணயம்

இதையடுத்து நெல் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை நிர்ணயம் செய்வதற்கான முத்தரப்பு கூட்டம் கலெக்டர் கோவிந்தராவ் தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது. இதில் டயர் வகை நெல் அறுவடை எந்திரங்களுக்கு 1 மணி நேர வாடகை ரூ.1,500 என்றும், செயின் வகை நெல் அறுவடை எந்திரங்களுக்கு 1 மணி நேர வாடகை ரூ.2 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நெல் அறுவடை நடைபெறும் இடங்களில் எந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூலிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்தும்படி கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் கான் மேற்பார்வையில் வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் குமணன், இளநிலை பொருளாளர் மாணிக்கவேலு மற்றும் அதிகாரிகள் நெல் அறுவடை பணிகள் நடைபெறும் கிராமங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

கூடுதலாக வசூலிக்கக்கூடாது

அப்போது மாவட்ட கலெக்டரால் நிர்ணயிக்கப்பட்ட வாடகை தொகையை விட கூடுதலாக வசூல் செய்யக்கூடாது என அறிவுறுத்தினர். மேலும் கூடுதல் வாடகை தொகை வசூலிப்பது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

Next Story