குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பேரணி - கண்டன ஆர்ப்பாட்டம் வேல்முருகன் பங்கேற்பு


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பேரணி - கண்டன ஆர்ப்பாட்டம் வேல்முருகன் பங்கேற்பு
x
தினத்தந்தி 23 Jan 2020 10:45 PM GMT (Updated: 23 Jan 2020 7:55 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மல்லிப்பட்டினத்தில் பேரணி- ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வேல்முருகன் பங்கேற்றார்.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மல்லிப்பட்டினத்தில் ஜமாத் மற்றும் அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மல்லிப்பட்டினம் பஸ் நிலையத்தில் தொடங்கிய பேரணி புதுமனைத்தெரு மில் ரோடு வரை சென்றது. பின்னர் அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஜமாத் தலைவர் கமருதீன் தலைமை தாங்கினார். செயலாளர் அசன் முகைதீன், சமுதாய நல மன்ற தலைவர் அப்துல் ஹலீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ் மாநில எஸ்.டி.பி.ஐ கட்சி செயலாளர் அபுபக்கர் சித்திக், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் ஹாஜாஅலாவுதீன், கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முத்து உத்திராபதி ஆகியோர் பேசினர்.

தமிழில் குடமுழுக்கு

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து போராடி வருகிறோம். இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களை இந்தியாவில் இருந்து பிரிப்பதே நரேந்திரமோடி, அமித்ஷா ஆகியோரின் திட்டம். பல மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த முடியாது என கூறி உள்ளது. விவசாயிகள், மாணவர்கள் மீதும் அக்கறை இல்லாத ஆட்சி தான் மத்தியிலும் மாநிலத்திலும் நடக்கிறது. தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை தமிழில் தான் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story