160 பேருக்கு ரூ.35 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் வழங்கினார்


160 பேருக்கு ரூ.35 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் வழங்கினார்
x
தினத்தந்தி 23 Jan 2020 11:00 PM GMT (Updated: 23 Jan 2020 8:16 PM GMT)

மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாள் விழாவில் 160 பேருக்கு ரூ.35 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் வழங்கினார்.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம் வேம்புக்குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 58 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 2 ஆயிரத்து 500 மதிப்பில் முதியோர் ஓய்வூதியத்தொகைக்கான ஆணைகளையும், வருவாய்த்துறையின் சார்பில் 19 நபர்களுக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும், சமூக நலத்துறையின் சார்பில் 8 பட்டப்படிப்பு படித்த பயனாளிகளுக்கும், 29 10-ம் வகுப்பு படித்த பயனாளிகள் என மொத்தம் 37 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கமும், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின்கீழ் 23 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.99 ஆயிரத்து 15 மதிப்பில் உதவி உபகரணங்களையும் வழங்கினார்.

160 பேருக்கு

மேலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பேருக்கு ரூ.47 ஆயிரத்து 500 மதிப்பில் இலவச தையல் எந்திரம் மற்றும் சலவை பெட்டிகளும், வேளாண்மைத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.9 ஆயிரத்து 130 மதிப்பில் வேளாண் உப கரணங்களையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.3 ஆயிரம் மதிப்பில் இடுபொருட்களையும், 1 பயனாளிக்கு ரூ.1 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் உழவு எந்திரமும், 5 விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் காய்கறி விதைகளும் என மொத்தம் 160 பேருக்கு ரூ.35 லட்சத்து 3 ஆயிரத்து 145 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில் திட்ட இயக்குனர்கள் சுந்தரராஜன் (ஊரக வளர்ச்சி முகமை), ஜெயராமன் (மகளிர் திட்டம்), மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சந்திரசேகர், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஏழுமலை, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி, ஊராட்சி மன்றத்தலைவர் ரமேஷ், துணை இயக்குனர் (தோட்டக்கலை) அன்புராஜன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பூங்கோதை, வட்டாட்சியர் கலைவாணன் ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் கல்யாண சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story