எம்.ஜி.ஆர். கொண்டு வந்த நுழைவு தேர்வையே எதிர்த்தோம் நீட் தேர்வுக்கு எதிரான கூட்டத்தில் கி.வீரமணி பேச்சு


எம்.ஜி.ஆர். கொண்டு வந்த நுழைவு தேர்வையே எதிர்த்தோம் நீட் தேர்வுக்கு எதிரான கூட்டத்தில் கி.வீரமணி பேச்சு
x
தினத்தந்தி 23 Jan 2020 11:00 PM GMT (Updated: 23 Jan 2020 8:34 PM GMT)

எம்.ஜி.ஆர். கொண்டு வந்த நுழைவு தேர்வையே எதிர்த்தோம் என நீட் தேர்வுக்கு எதிரான கூட்டத்தில் கி.வீரமணி கூறினார்.

கரூர்,

‘நீட்‘ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் பிரசார பயண குழுவினர் கன்னியாகுமரியில் இருந்து வேன் மூலம் பிரசார பயணத்தை தொடங்கினர். நேற்று மாலையில் கரூருக்கு வந்த பிரசார பயண குழுவினருக்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் கரூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காளிமுத்து வரவேற்று பேசினார். பொதுக்குழு உறுப்பினர் அன்பு முன்னிலை வகித்தார். தலைமை கழக சொற்பொழிவாளர் பெரியார்செல்வன், கிராமப்புற பிரசாரக் குழு மாநில அமைப்பாளர் அன்பழகன் ஆகியோர் தொடக்க உரை ஆற்றினர். திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், ஜெயக்குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- ஒடுக்கப்பட்டசமுதாய மக்கள் தங்கள் தோளில் துண்டு போட கூடாது. முழங்காலுக்கு கீழ் வேட்டி அணிய கூடாது. காலில் செருப்பு அணிய கூடாது. கையில் குடை பிடிக்க கூடாது என பல பிரச்சினைகள் இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது. அப்படிபட்ட சமுதாயத்திற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர் பெரியார் ஆவார்.

பெரியார்

வெள்ளைக்காரன் கருப்பன் என்று பிரித்து, தென் ஆப்பிரிக்காவில் கருப்பின மக்களை அடிமையாக்கிய நேரத்தில் கூட அங்கே பல போராட்டங்கள் நடந்துள்ளது. மண்டேலா போன்றவர்கள் முன்னின்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி உள்ளனர். நீங்கள் ஒன்றை நினைத்து பார்க்க வேண்டும். நம்முடைய நாட்டில் ஜாதி முறை உள்ளது. இது மனித தர்ம முறைக்கு எதிரானது. இதை விட கேவலமானது என்று தேடினால் கூட கண்டு பிடிக்க முடியாது. காரணம் மனிதனை, மனிதன் தொட்டால் குற்றம் என்றனர்.

சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் கல்வி கற்ற விகிதம் 1 விழுக்காடு தான் இருந்துள்ளது. பின்னர் காலம் செல்ல, செல்ல கல்வி அறிவு குறைவாகவே இருந்து உள்ளது. திராவிடர் கழகம் என்ன செய்தது என்கின்றனர். மக்களுக்கு கல்வி கண் கொடுத்த மூன்றாம் தர போராளியாக இருந்தவர் தான் பெரியார்.

விரட்டி அடித்தோம்

மக்களுக்கு நீட் தேர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எம்.ஜி.ஆர். கொண்டு வந்த நுழைவு தேர்வை எதிர்த்து, திராவிட கழகமும், திராவிட முன்னேற்ற கழகமும் போராடி விரட்டி அடித்தோம். நுழைவு தேர்வு கூடாது என்று சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது மந்திரிகளுக்கு தெரியவில்லை.

ஒரு சட்டம் உள்ளபோது, இன்னொரு சட்டம் வர முடியாது. குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அப்படிபட்ட நிலையில் நீட் தேர்வை கொண்டு வருவதின் ரகசியம் என்ன? இந்திய பிரதமர் இந்தியா ஒரே நாடு என்று கூறுகிறார். அவ்வாறு கூறும் அரசியல் சட்டத்தின் அடிப்படை கட்டுமானத்திற்கு நீட் தேர்வு சட்டவிரோதம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன், சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் கந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story