கிராம ஊராட்சி தலைவர்கள் கட்சி பாகுபாடு இன்றி மக்களின் தேவைகளை நிறைவேற்றவேண்டும் அமைச்சர் பேச்சு


கிராம ஊராட்சி தலைவர்கள் கட்சி பாகுபாடு இன்றி மக்களின் தேவைகளை நிறைவேற்றவேண்டும் அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 23 Jan 2020 11:00 PM GMT (Updated: 23 Jan 2020 8:48 PM GMT)

கிராம ஊராட்சி தலைவர்கள் கட்சி பாகுபாடு இன்றி மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசினார்.

திருச்சி,

திருச்சி கலையரங்கம் புதிய திருமண மண்டபத்தில் நேற்று ஊராட்சி தலைவர்கள், துணை தலைவர்களுக்கான அறிமுக பயிற்சி வகுப்பு நடந்தது. இந்த பயிற்சி வகுப்பில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அந்தநல்லூர், மணிகண்டம், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, திருவெறும்பூர், தா.பேட்டை ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 200 கிராம ஊராட்சிகளின் தலைவர்கள் மற்றும் துணை தலைவர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பிற்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். பயிற்சியை சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசும்போது, முதல்-அமைச்சரின் சீரிய முயற்சியினால் தமிழகம் இன்று அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. குடிநீர் வசதி, சாலை வசதி, சுகாதார வசதி, தெருவிளக்கு வசதி போன்ற தேவைகள் கிராமங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வது தான் ஊராட்சி மன்ற தலைவரின் தலையாய பொறுப்பாகும். உங்களுடைய பணி சிறக்க மக்களை தினந்தோறும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்கள் கட்சி பாகுபாடு இல்லாமல் மக்களின் தேவைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்றார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், செயற்பொறியாளர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் தண்டபாணி, பயிற்றுனர்கள் ஜோசப் சவுந்தரராஜன், கவிதா ஆகியோர் புதிதாக பதவி ஏற்றுள்ள ஊராட்சி தலைவர்கள் எவ்வாறு மக்கள் பணியாற்றவேண்டும், அவர்களுக்கான அதிகாரங்கள், விதிமுறைகள் பற்றி விளக்கி பேசினார்கள்.

கணவர்களுக்கு அனுமதி இல்லை

பயிற்சி வகுப்பில் ஊராட்சி தலைவர்கள், மற்றும் துணை தலைவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சில பெண் ஊராட்சி தலைவர்களின் கணவன்மார்கள் உள்ளே வர முயன்றபோது அதிகாரிகள் அவர்களுக்கு அனுமதி மறுத்து விட்டனர். இதனால் அவர்கள் பயிற்சி வகுப்பு முடியும் வரை வெளியில் காத்து நின்றனர். சில இளம் ஊராட்சி தலைவிகளின் கணவன்மார்கள் கைக்குழந்தையோடு வெளியில் காத்து நின்றதையும், பச்சிளம்குழந்தைகள் அழுதபோது அவற்றிற்கு புட்டிப்பால் ஊட்டி சமாதானப்படுத்திய காட்சியையும் காண முடிந்தது.

இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டாவது நாளாக பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் முகாமில் மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர், தொட்டியம், புள்ளம்பாடி, முசிறி, உப்பிலியபுரம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் வெற்றி பெற்ற தலைவர்கள் மற்றும் துணை தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

Next Story