பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி இத்தாலியில் தயாரிக்கப்பட்டது துணை சூப்பிரண்டு கணேசன் பேட்டி


பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி இத்தாலியில் தயாரிக்கப்பட்டது துணை சூப்பிரண்டு கணேசன் பேட்டி
x
தினத்தந்தி 23 Jan 2020 11:00 PM GMT (Updated: 23 Jan 2020 9:06 PM GMT)

சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி இத்தாலியில் தயாரிக்கப்பட்டது என்று துணை சூப்பிரண்டு கணேசன் கூறினார்.

நாகர்கோவில்,

களியக்காவிளையில் கடந்த 8-ந் தேதி நடந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலையில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கியை போலீசார் நேற்று கேரள மாநிலம் எர்ணாகுளம் பஸ் நிலையம் அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து மீட்டனர்.

இதுதொடர்பாக குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டும், வில்சன் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியுமான கணேசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ஆலோசனை

களியக்காவிளை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணைக்கு அவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். விசாரணையின்போது கேட்கப்படும் கேள்விகளுக்கும் முறையாக பதில் அளிக்கிறார்கள். வில்சனை கொலை செய்தபிறகு அவர்கள் 2 பேரும் களியக்காவிளையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வந்திருக்கிறார்கள். திருவனந்தபுரத்தில் இருந்து பஸ் மூலம் மறுநாள் காலை எர்ணாகுளம் வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

அதுவரை கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை தங்களது பாதுகாப்புக்காக இருக்கட்டும் என்று அவர்கள் மறைத்து வைத்திருக்கிறார் கள். எர்ணாகுளம் பஸ் நிலையத்தில் அவர்கள் சென்று இறங்கியதும் செய்தித்தாள்களில் அவர்களை பற்றிய செய்திகள் வந்துள்ளதை தெரிந்துள்ளனர். இதையடுத்து மறைத்து வைத்திருக்கும் துப்பாக்கியை எங்காவது வீசிவிட வேண்டும், இல்லையென்றால் போலீசாரிடம் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சம் அவர்களிடம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தவுபிக் வைத்திருந்த துப்பாக்கியை பஸ் நிலையம் அருகில் இருந்த சாக்கடை கால்வாயில் வீசிவிடுமாறு அப்துல் சமீம் ஆலோசனை கூறியுள்ளார். அதன்படி அவரும் அந்த சாக்கடை கால்வாயில் துப்பாக்கியை வீசியிருக்கிறார்.

ராணுவத்துக்கு பயன்படுத்தக்கூடியது

இதை தவுபிக்கும், அப்துல் சமீமும் இன்று (அதாவது நேற்று) எங்களிடம் அடையாளம் காட்டினர். போலீசாரும், துப்புரவு பணியாளர்களும் சாக்கடை கால்வாய்க்குள் இறங்கி தேடினர். சில மணி நேர தேடுதலுக்குப்பிறகு அந்த துப்பாக்கி தென்பட்டது. அதை மீட்டுள்ளோம்.

இந்த துப்பாக்கி 7.65 மி.மீ. தானியங்கி (ஆட்டோமெட்டிக்) ரக பிஸ்டல் ஆகும். இது இத்தாலியில் தயாரிக்கப்பட்டது. இந்த துப்பாக்கியை இத்தாலியில் ராணுவத்தினர் மட்டுமே பயன்படுத்தக் கூடியது என்று அதில் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த துப்பாக்கியில் பயன்படுத்தப்படாத 5 தோட்டாக்களும் இருந்தன. இந்த துப்பாக்கி மொத்தம் 10 தோட்டாக்கள் வரை பயன்படுத்தக்கூடியதாகும்.

எப்படி கிடைத்தது?

கொலை செய்யப்பட்ட வில்சனின் உடலில் 3 தோட்டாக்கள் பாய்ந்திருந்தன. 2 தோட்டாக்கள் அவர் உடலை ஊடுருவாமல் தரையில் பாய்ந்திருந்தன. அதுபோக 5 தோட்டாக்கள் துப்பாக்கியில் இருந்தன. 10 தோட்டாக்கள் தவிர மேலும் கூடுதலாக தோட்டாக்கள் பயன்படுத்த முடியுமா? என்பதை ஆய்வகத்தில் பரிசோதித்து பார்த்தால்தான் தெரியும். இத்தாலியில் ராணுவத்துக்கு பயன்படுத்தும் துப்பாக்கியை பெங்களூருவில் கைது செய்யப்பட்ட மெகபூப் பாஷா என்ற அப்துல்லா வாங்கிக் கொடுத்துள்ளார். அவருக்கு இந்த துப்பாக்கி எப்படி கிடைத்தது? என்பது விசாரணை செய்தால்தான் தெரியும்.

கொலைக்கு அப்துல் சமீம் பயன்படுத்திய வெட்டுக்கத்தியை களியக்காவிளையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் வீசிவிட்டுச் சென்றதாக தெரிவித்துள்ளனர். அந்த இடம் பற்றிய தகவலையும் தெரிவித்திருக்கிறார்கள். அந்த கத்தியையும் மீட்க அவர்கள் 2 பேரையும் சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்ல இருக்கிறோம். திருச்சூருக்கும் இவர்கள் 2 பேரையும் அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. அதன்பிறகுதான் கர்நாடக மாநிலத்துக்கு செல்வது குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு துணை சூப்பிரண்டு கணேசன் கூறினார்.

Next Story