ரூ.5 லட்சம் கேட்டு தொழில் அதிபரை மிரட்டிய வழக்கு: ஓராண்டுக்கு பிறகு மேலும் 2 பேர் கைது


ரூ.5 லட்சம் கேட்டு தொழில் அதிபரை மிரட்டிய வழக்கு: ஓராண்டுக்கு பிறகு மேலும் 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Jan 2020 11:00 PM GMT (Updated: 23 Jan 2020 9:46 PM GMT)

ரூ.5 லட்சம் கேட்டு தொழில் அதிபரை மிரட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேர் ஓராண்டுக்கு பிறகு கைது செய்யப்பட்டனர்.

வெண்ணந்தூர்,

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். தொழில் அதிபர். இவரை கடந்த ஓராண்டுக்கு முன்பு ரூ.5 லட்சம் கேட்டு 4 பேர் கொண்ட மர்மகும்பல் மிரட்டியது. இதுகுறித்து சக்திவேல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அந்தியூர் போலீசார் காரில் அந்த கும்பலை துரத்தி சென்று பிடிக்க முயன்றனர். இதனிடையே அவர்கள் சேலம் வழியாக தப்பி செல்ல முயன்றனர். இதையறிந்த சேலம் அன்னதானபட்டி போலீசாரும் அந்த கும்பல் சென்ற காரை விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். அப்போது நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே அலவாய்பட்டியில் உள்ள ஒரு சாலையின் வளைவில் திரும்ப முடியாமல் கார் நின்றது.

இதையடுத்து அந்த கும்பல் காரில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்றது. மேலும் அவர்கள் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரை தாக்க முயன்றனர். இதனால் அவர் தற்பாதுகாப்புக்காக துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு முறையும், அவர்கள் வந்த காரை நோக்கி ஒரு முறையும் சுட்டார். இதில் அந்த கும்பலை சேர்ந்த 2 பேர் தப்பி ஓடினர். மேட்டூர் பகுதியை சேர்ந்த இளங்கோ மற்றும் வேலூர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மற்ற 2 பேரை தேடி வந்தனர்.

2 பேர் கைது

இந்த சம்பவத்தில் தொடர்புடைய நீராவி முருகன், ராஜே‌‌ஷ்குமார் ஆகியோர் மற்றொரு வழக்கில் கைதாகி கோவை சிறையில் இருப்பது வெண்ணந்தூர் போலீசாருக்கு தெரியவந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் கோவைக்கு சென்ற வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணைக்காக வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில், அவர்கள் இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்க முயன்று தப்பியோடியவர்கள் எனவும், ஆள்கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து நீராவி முருகன், ராஜே‌‌ஷ்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கார், கத்தி, வீச்சரிவாள் மற்றும் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை பரமத்தி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story