காரிமங்கலம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை


காரிமங்கலம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 23 Jan 2020 10:15 PM GMT (Updated: 23 Jan 2020 10:21 PM GMT)

காரிமங்கலம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த மேல்சவுளுப்பட்டி தலையன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். கூலித்தொழிலாளி. இவரது மகள் மணிமேகலை (வயது 16). இவர் பந்தாரஅள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு தனது அக்காள் வித்யாவுடன் வழக்கம்போல் இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றுள்ளார். நேற்று அதிகாலை அவரது அக்காள் பார்த்தபோது வீட்டில் மணிமேகலை இல்லை. இதனால் திடுக்கிட்ட அவர் அக்கம்பக்கத்தில் சென்று மணிமேகலையை தேடி பார்த்துள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

அப்போது வீட்டின் அருகிலுள்ள மரத்தில் மணிமேகலை உடல் தூக்கில் தொங்கியது. இதனைக்கண்ட அவர் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். இதைக் கேட்டதும் அக்கம்பக்கம் இருந்த உறவினர்கள் அங்கு ஓடி வந்து பார்த்தனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காரிமங்கலம் போலீசார் அங்கு வந்து மணிமேகலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், மணிமேகலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மணிமேகலை தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story