நாட்டறம்பள்ளி அருகே, தொழிலாளி அடித்துக்கொலை - 2-வது மனைவி உள்பட 3 பேர் கைது


நாட்டறம்பள்ளி அருகே, தொழிலாளி அடித்துக்கொலை - 2-வது மனைவி உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2020 11:30 PM GMT (Updated: 24 Jan 2020 4:42 PM GMT)

நாட்டறம்பள்ளி அருகே தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய 2-வது மனைவி உள்பட 3 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

நாட்டறம்பள்ளி,

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் கிட்டபையனூர் பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 60). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். 2-வது மனைவி வனிதா (43). இவர்களுக்கு நந்தகுமார் (25), குமரேசன் (25) ஆகிய 2 மகன்கள் உண்டு. அவர்களில் நந்தகுமார் சில ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறி நிரோஷா என பெயரை மாற்றிக்கொண்டார்.

மகன் திருநங்கையாக மாறியதால் சின்னராஜ், தனது 2-வது மனைவி வனிதா, மகன் குமரேசன், திருநங்கை நிரோஷாவுடன் தகராறு செய்துவந்துள்ளார். இதனால் அவர ்மீது 3 பேரும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றிருந்த சின்னராஜ் மாலையில் வீடுதிரும்பினார். அப்போது அவரை ஆத்திரத்தில் இருந்த மனைவி வனிதா, மகன் குமரேசன், நிரோஷா ஆகிய 3 பேரும் சேர்ந்து உருட்டுக்கட்டை, கையால் சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த சின்னராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, வனிதா, குமரேசன், நிரோஷா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Next Story