பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு
x
தினத்தந்தி 24 Jan 2020 10:15 PM GMT (Updated: 24 Jan 2020 6:47 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, விவசாயி சங்க பிரதிநிதிகள், விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரனிடம் விவசாயிகள் ஒரு மனு கொடுத்தனர். அதில், மக்காச்சோளத்திற்கு ஒரு குவிண்டாலுக்கு விலை ரூ.3 ஆயிரம் அறிவித்து, அரசே கொள்முதல் செய்ய வேண்டும். புறம்போக்கு நிலங்களை நீண்ட காலமாக அனுபவித்து வரும் விவசாயிகளுக்கு மீண்டும் பட்டா வழங்க வேண்டும். சின்ன வெங்காயத்தில் வேரழுகல் நோயால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். 2015 முதல் 2017 வரை எறையூரில் உள்ள பெரம்பலூர் அரசு சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையான ரூ.32 கோடியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து 5 ஆண்டுகளாக வறட்சியால் பாதிக்கப்பட்டு, விவசாய உற்பத்தி குறைந்ததால், வாங்கிய கடனை கட்ட முடியாமல் அவதிப்படும் விவசாய பயிர் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ்நாடு பாமாயில் மர சாகுபடியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் முருகேசன் பேசுகையில், பெரம்பலூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை ஒழுங்காக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையம் போதிய அளவில் மாவட்டத்தில் அமைக்க வேண்டும் என்றார்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் பேசுகையில், வேரழுகல் நோயால் பாதிக்கப்பட்ட சின்ன வெங்காயம், படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் ஆகிய பயிர்களை பயிரிட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகையை அரசே செலுத்தி, காப்பீட்டு தொகையை பெற்று தர வேண்டும். விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். பட்டா நிலங்களை, தரிசு நிலங்களாக மாற்றுவதற்கு துணை புரியும் வருவாய்த்துறையினர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் கணேசன், பெரம்பலூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி முகமது அஸ்லம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செல்வக்குமரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பூவலிங்கம் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story