தாளவாடி அருகே, தமிழக- கர்நாடக எல்லையில் சிறுத்தை தாக்கி 4 ஆடுகள் சாவு - பொதுமக்கள் அச்சம்


தாளவாடி அருகே, தமிழக- கர்நாடக எல்லையில் சிறுத்தை தாக்கி 4 ஆடுகள் சாவு - பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 25 Jan 2020 10:15 PM GMT (Updated: 25 Jan 2020 5:01 PM GMT)

தாளவாடி அருகே தமிழக- கர்நாடக எல்லையில் சிறுத்தை தாக்கி 4 ஆடுகள் இறந்தன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தாளவாடி, 

தாளவாடி அருகே தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள மலைக்கிராமமான பாரதிபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 42). விவசாயி. இவருடைய தோட்டத்திலேயே வீடும் உள்ளது. இவர் தனது தோட்டத்தில் ஆட்டுப்பட்டி அமைத்்து அதில் 30 ஆடுகளை வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு பட்டியில் ஆடுகளை கட்டி வைத்துவிட்டு வீட்டுக்கு தூங்க சென்றுவிட்டார். நேற்று காலை எழுந்து வந்து பார்த்தபோது பட்டியில் இருந்த 3 ஆடுகள் கடித்து கொல்லப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் ஒரு ஆட்டின் சில பாகங்கள் மட்டும் கிடந்ததையும் கண்டார். நள்ளிரவில் பட்டிக்குள் புகுந்த மர்ம விலங்கு ஒன்று 4 ஆடுகளை கடித்துக்கொன்றதுடன், அதில் ஒரு ஆட்டை முழுமையாக தின்றுவிட்டு சென்றதும் தெரியவந்தது.

உடனே அவர் இதுபற்றி கர்நாடக மாநில வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர். மேலும் அங்கு பதிவான கால் தடங்களையும் ஆய்வு செய்தனர். அப்போது அது சிறுத்தையின் கால் தடம் தான் என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

தோட்டத்துக்குள் புகுந்து 4 ஆடுகளை சிறுத்தை கடித்துக் கொன்ற சம்பவத்தால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சசத்தில் உள்ளனர்.

Next Story