பர்கூர் அருகே, கார் கவிழ்ந்து பெங்களூரு தொழில் அதிபர் பலி - மனைவி உள்பட 2 பேர் காயம்


பர்கூர் அருகே, கார் கவிழ்ந்து பெங்களூரு தொழில் அதிபர் பலி - மனைவி உள்பட 2 பேர் காயம்
x
தினத்தந்தி 25 Jan 2020 10:00 PM GMT (Updated: 25 Jan 2020 6:06 PM GMT)

பர்கூர் அருகே நடந்த கார் கவிழ்ந்து பெங்களூரு தொழில் அதிபர் பலியானார். மேலும் அவருடைய மனைவி உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.

பர்கூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் மனோஜ் ஜெயின் (வயது 42). இவரது மனைவி அல்கா ஜெயின் (35). இவர்கள் இருவரும் நேற்று மாலை பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை மனோஜ்ஜெயின் ஓட்டி வந்துள்ளார். இவர்கள் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை சாலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சின்னபனகமுட்லு என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது அங்குள்ள ஒரு வளைவில் திரும்பும் போது, மோடிகுப்பத்தைச் சேர்ந்த விவசாயி ராஜகோபால் (45) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த மனோஜ் ஜெயின் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி அல்காஜெயின் படுகாயம் அடைந்தார். மேலும் மோட்டார் சைக்கிளில் சென்ற ராஜகோபாலும் காயம் அடைந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கந்திகுப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த அல்கா ஜெயின், விவசாயி ராஜகோபால் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான மனோஜ் ஜெயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story