குடியரசு தின விழாவை முன்னிட்டு காஞ்சீபுரத்தில் கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்


குடியரசு தின விழாவை முன்னிட்டு காஞ்சீபுரத்தில் கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்
x
தினத்தந்தி 26 Jan 2020 10:30 PM GMT (Updated: 26 Jan 2020 6:02 PM GMT)

நாட்டின் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டதையொட்டி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலெக்டர் பா.பொன்னையா தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரத்தில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டதையொட்டி காலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கத்தில் மாவட்ட கலெக்டர் பா.பொன்னயைா தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர், திறந்த ஜீப்பில் வலம் வந்து காவல் துறையினர் மற்றும் தேசியமாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

இதைத்தொடர்ந்து நாட்டில் சமாதானம் பிறக்க வேண்டி வெள்ளை புறாக்களையும், மூவர்ண கொடி நிறத்தில் வண்ண பலூன்களையும் பறக்கவிட்டார்.

இந்த விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், விலையில்லா 3 சக்கர வாகனம் 1 நபருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை 1 நபருக்கும் வழங்கப்பட்டது.

முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை 4 நபர்களுக்கும், வேளாண்மைத்துறை சார்பில், மாவட்ட அளவில் நெல் பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டது.

மேலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ஊரக வளர்ச்சித்துறை சார்பில், முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் வீடுகளும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள், வேளாண்மை பொறியியல் துறை சார்பில், டிராக்டர் வாங்க அரசு வழங்கும் மானிய தொகைகளும், தாட்கோ மூலம், பயணிகள் ஆட்டோ வாங்க மானியத் தொகைகள் என மொத்தம் 76 பயனாளிகளுக்கு ரூ.64 லட்சத்து 40 ஆயிரத்து 2 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பிறகு, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு, மொழிப்போர் தியாகிகளுக்கு கதர் ஆடை அணிவித்து மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாராயணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி, மகளிர் திட்டம் ஆர்.எழிலரசன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிறகு பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

காஞ்சீபுரத்தில் குடியரசு தின விழாவையொட்டி காஞ்சீபுரம் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம், காஞ்சீபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் ஆகிய இடங்களில் மண்டல இணைப்பதிவாளர் ஆர்.கே.சந்திரசேகரன் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் மண்டல இணைப்பதிவாளர், அலுவலக பணியாளர், அலுவலர் சங்கர், முதல்வர் ராஜ்நந்தினி, கண்காணிப்பாளர்கள் காத்தவராயன், பாலாஜி, கோதண்டராமன், காஞ்சீபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் சத்தியநாராயணன், மேலாளர் முரளி உள்பட ஏராளமான கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

உத்திரமேரூர்

உத்திரமேரூர் காவல்நிலையத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சப்-இன்ஸ்பெக்டர் இனாய் பாஷா கொடியேற்றி வைத்தார். இதில் ஏராளமான போலீசார் பங்கேற்றனர். அதேபோல் உத்திரமேரூர் அடுத்த களியம்பூண்டி ஊராட்சியில் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் நடைப்பெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் துணை மேலாளாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். விடுதியின் மேற்பார்வையாளர் வில்லியம்ஸ் வரவேற்புரை வழங்கினார். நன்கொடையாளர் சுரேஷ்குமார் மற்றும் ஒருக்கினைப்பாளர் நாராயணசாமி கொடியேற்றி வைத்து இனிப்புகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர்.

இதில் மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் வாட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ் கொடியேற்றி வைத்து மரக்கன்றுகள் நட்டார்.

படப்பை

குடியரசு தினவிழாவை முன்னிட்டு காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குடியரசு தின விழா சிறப்பாக நேற்று கொண்டாடப்பட்டது. மூவர்ண தேசிய கொடியை வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் பாஸ்கரன் கொடி ஏற்றிவைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்..

இதேபோல் படப்பை ஊராட்சியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பெருமாள், தேசியக்கொடியை ஏற்றி இனிப்புகளை வழங்கினார்.

Next Story