ஆண்டிப்பட்டி பகுதியில், கடும் பனிப்பொழிவு: மல்லிகை பூக்கள் உற்பத்தி குறைந்து - கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை


ஆண்டிப்பட்டி பகுதியில், கடும் பனிப்பொழிவு: மல்லிகை பூக்கள் உற்பத்தி குறைந்து - கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை
x
தினத்தந்தி 27 Jan 2020 10:30 PM GMT (Updated: 27 Jan 2020 1:11 PM GMT)

ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூக்கள் உற்பத்தி குறைந்து ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கதிர்நரசிங்கபுரம், கன்னியப்பபிள்ளைபட்டி, கோத்தலூத்து, சித்தார்பட்டி, பாலக்கோம்பை, தெப்பம்பட்டி, திம்மரசநாயக்கனூர், டி.பொம்மிநாயக்கன்பட்டி, டி.சுப்புலாபுரம், ஏத்தகோவில், சுந்தர்ராஜபுரத்தில் மல்லிகை பூக்கள் சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. இங்கு உற்பத்தியாகும் பூக்கள் ஆண்டிப்பட்டி பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக தொடர் மழை பெய்ததால் பூக்களின் உற்பத்தி சற்று அதிகரித்து காணப்பட்டது. இதனால் மார்க்கெட்டில் பூக்களின் விலை சராசரியாக இருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக ஆண்டிப்பட்டி தாலுகாவில் மழை பெய்யவில்லை. ஆனால் இரவு நேரத்தில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது.

இதன் காரணமாக ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை பூக்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் பனிப்பொழிவால் செடிகளில் பூக்கள் அதிகம் பூக்கவில்லை. பூக்கும் பூக்களும் பனியால் செடிகளிலேயே கருகிவிடுகிறது. இதன்காரணமாக ஆண்டிப்பட்டியில் செயல்படும் பூ மார்க்கெட்டிற்கு மல்லிகை பூக்களின் வரத்து குறைந்து கொண்டே வருகிறது.

இவ்வாறு மல்லிகை பூக்கள் வரத்து குறைந்த காரணத்தால் அதன் விலை உயர்ந்துள்ளது. ஆண்டிப்பட்டி பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகை பூக்கள் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை பூக்களுக்கு மார்க்கெட்டில் உரிய விலை கிடைத்தாலும், பனியால் உற்பத்தி இல்லாத காரணத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அதே நேரத்தில் பூ மார்க்கெட்டிற்கு சம்பங்கி பூக்கள் வரத்து அதிகரித்து இருந்ததால் அதன் விலை வீழ்ச்சி அடைந்தது. ஒரு கிலோ சம்பங்கி பூக்களை ரூ.5–க்கு கூட வாங்க வியாபாரிகள் யாரும் முன்வரவில்லை. இதனால் சம்பங்கி பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்த வியாபாரிகள் உரிய விலை இல்லாததால் அவற்றை சாலையில் கொட்டிவிட்டு சென்றனர்.

Next Story