3 பெண்களை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம்; இன்ஸ்பெக்டர் கைது


3 பெண்களை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம்; இன்ஸ்பெக்டர் கைது
x
தினத்தந்தி 30 Jan 2020 10:30 PM GMT (Updated: 30 Jan 2020 1:13 PM GMT)

வழக்கில் இருந்து 3 பெண்களை விடுவிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பார்த்திபனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் மேலக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது குடும்ப பிரச்சினை தொடர்பாக பார்த்திபனூர் போலீசார் கடந்த 24–ந் தேதி, 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பெண்களை மட்டும் வழக்கில் இருந்து விடுவிக்க பார்த்திபனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜராஜனிடம் கேட்டுள்ளனர். அதற்கு இன்ஸ்பெக்டர் ராஜராஜன் ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

உடனே தங்கவேல், ரூ.15 ஆயிரத்தை இன்ஸ்பெக்டர் ராஜராஜனிடம் கொடுத்துள்ளார். மீதி ரூ.5 ஆயிரத்தை நேற்று மதியம் கொடுப்பதற்கு முன்பு ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு உண்ணிகிருஷ்ணன் ஆலோசனையின் பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை பார்த்திபனூர் போலீஸ் நிலையத்தில் நேற்று மதியம் இன்ஸ்பெக்டர் ராஜராஜனிடம் தங்கவேல் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று இன்ஸ்பெக்டர் ராஜராஜனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பின்பு பார்த்திபனூர் போலீஸ் நிலையத்தில் உள்ள ஒரு அறையில் அவரிடம் 3 மணி நேரத்திற்கு மேல் தீவிர விசாரணை நடத்தினர். பார்த்திபனூரில் இன்ஸ்பெக்டர் தங்கியிருந்த அறையிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். பின்னர் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ராஜராஜன், பார்த்திபனூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவரது சொந்த ஊர் பெரம்பலூர் ஆகும். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story