குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி - மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டமும் நடந்தது


குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி - மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டமும் நடந்தது
x
தினத்தந்தி 30 Jan 2020 10:00 PM GMT (Updated: 30 Jan 2020 8:43 PM GMT)

திண்டுக்கல், பழனி, கொடைக்கானலில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மனித சங்கிலி மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடந்தது.

திண்டுக்கல்,

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து தமிழக மக்கள் ஒற்றுமை மேடை எனும் அமைப்பு சார்பில் திண்டுக்கல்லில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், நகர செயலாளர் ராஜப்பா, காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்-பழனி சாலையில் கல்லறைதோட்டம் முதல் முருகபவனம் வரை ஏராளமானோர் கைகளை கோர்த்தபடி நின்றனர்.

இதேபோல் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில், திண்டுக்கல் பேகம்பூரில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர தலைவர் முகமதுஇப்ராகிம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இர்பான், திண்டுக்கல் தொகுதி தலைவர் முகமதுநஜிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சிக்கந்தர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அப்போது குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. முடிவில் நகர செயலாளர் சதாம்உசேன் நன்றி கூறினார்.

பழனி அருகேயுள்ள கீரனூர், மேல்கரைபட்டி, பெரிச்சிபாளையம் பகுதிகளை சேர்ந்த முஸ்லிம்கள் சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மனிதசங்கிலி போராட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கீரனூர் பள்ளிவாசல் இமாம் ஹாஜி அமானுல்லா தலைமை தாங்கினார். நிர்வாகி அம்ஜத்அலி முன்னிலை வகித்தார்.

இந்த மனிதசங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கீரனூரில் இருந்து நால்ரோடு பிரிவு, மேல்கரைப்பட்டி வரை 5 கிலோமீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் கைகோர்த்தபடி நின்றனர். இந்த போராட்டத்தில் சுமார் 500 பேர் கலந்துகொண்டனர்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் பழனி குளத்துரோடு ரவுண்டானாவில் நேற்று இரவு காந்தி நினைவு தினம் அனுசரிப்பு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள், குழந்தைகள், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கொடைக்கானலில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மெழுகுவர்த்தியை ஏந்தியபடி மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி கோஷமிட்டனர். இதில் நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story