வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்; ரூ.1000 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிப்பு


வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்; ரூ.1000 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 31 Jan 2020 10:30 PM GMT (Updated: 31 Jan 2020 7:48 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ரூ.1000 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

திருப்பூர், 

ஊதிய உயர்வு ஒப்பந்தம் காலாவதியாகி பல மாதங்களை கடந்தும் ஐ.பி.ஏ.யும், மத்திய அரசும் பேச்சுவார்த்தையை காலதாமதப்படுத்தி வருகின்றனர்.எனவே ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்ைதயை உடனே தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி முதற்கட்டமாக நேற்று மற்றும் இன்று (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இதையொட்டி திருப்பூர் டவுன்ஹால் அருகே உள்ள ஆந்திரா வங்கி முன்பு அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் தலைமை தாங்கினார். பொறுப்பாளர்கள் விஜயானந்த், மகாதேவன், பெலிக்ஸ் பால்ராஜ், ராதாகிருஷ்ணன், ரவி, பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 9 வங்கி ஊழியர் சங்கங்கள் பற்கேற்றுள்ளன. இதில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கர்நாடகா வங்கி, கரூர் வைசியா உள்ளிட்ட வங்கிகளை சேர்ந்த முதன்மை மேலாளர்கள் முதல் துப்புரவு தொழிலாளர்கள் வரை என மொத்தம் 5 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

இன்றும் (சனிக்கிழமை) 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. இதன் பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வருகிற மார்ச் 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை 2-ம் கட்ட வேலை நிறுத்த போராட்டம், தொடர்ந்து ஏப்ரல் 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஆகிய போராட்டங்கள் நடைபெறும் என வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

இது குறித்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறியதாவது:-

ஊதிய உயர்வு கேட்டு தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தற்போது முதற்கட்டமாக 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இந்த போராட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 353 வங்கி கிளைகளை சேர்ந்த 5 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக ரூ.1000 கோடிக்கு வங்கிகளில் பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story