திருவாரூர் மாவட்டத்தில் வைக்கோல் சார்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


திருவாரூர் மாவட்டத்தில் வைக்கோல் சார்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 1 Feb 2020 10:30 PM GMT (Updated: 1 Feb 2020 7:08 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் வைக்கோல் சார்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. காவிரி நீர் பிரச்சினையால் குறிப்பிட்ட பகுதிகளில் நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒரு போக சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டனர். 1 லட்சத்து 49 ஆயிரம் எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 28 ஆயிரத்து 404 பரப்பளவில் தாளடி சாகுபடியாகும்.

இந்த நிலையில் சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையை அடைந்தது. இதனையடுத்து அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை, கூலி பிரச்சினையால் பெரும்பாலானோர்கள் எந்திரங்களை பயன்படுத்தி அறுவடை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏக்கருக்கு 30 மூட்டை என்ற நிலையில் மகசூல் கிடைத்து வருகிறது.

வைக்கோல்

எந்திர அறுவடையினால் வைக்கோல் அளவு குறைவாக கிடைக்கின்றது. அனைத்து பணிகளும் எந்திரமயமானதால் கால்நடை எண்ணிக்கை குறைந்து வருகிறது. வயல்களில் வைக்கோலை எந்திரத்தின் உதவியுடன் சேகரித்து கட்டு கட்டப்பட்டு வருகிறது.

இதில் வைக்கோல் எந்திரன் மூலம் கட்டு கட்ட, கட்டுக்கு ரூ.30 செலவு ஆகின்றது. இதனால் வைக்கோல் கட்டு ரூ.80-க்கு விற்பனையாகிறது. காளான் வளர்ப்பதற்கும், கால்நடை தீவனத்திற்கும், காதிக அட்டை தயாரிப்பதற்காகவும் வைக்கோல் வெளி மாநில, மாவட்ட வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். பல விவசாயிகள் வைக்கோலுக்கு கிடைக்கும் வருவாய் குறைவதால் வயலில் தீ வைத்து அழித்து எருவாக்கி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி கூறுகையில், ஏக்கருக்கு நீண்ட கால பயிர்களுக்கு 80 வைக்கோல் கட்டுகளும், குறுகிய கால பயிர்களுக்கு 60 கட்டுகளும் கிடைக்கிறது.

தொழிற்சாலை

வெளி மாவட்டத்தில் மாடுகளுக்கும், காகித தொழிற்சாலைகளுக்கும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். எந்திர அறுவடையின்போது வைக்கோல் தூளாகிவிடுவதால் வயலிலே தீயிட்டு உரமாக்கப்படுகிறது என்றார்.

காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அழகர்ராஜா கூறுகையில், டயர் எந்திரத்தின் மூலம் அறுவடை செய்தால் வைக்கோல் போதிய அளவு கிடைக்கும். வைக்கோல் கட்டு கட்டுவற்கான கூலியை கணக்கில் கொண்டால் விற்பனை செய்வதில் போதிய வருவாய் கிடைப்பதில்லை. எனவே திருவாரூர் மாவட்டத்தில் வைக்கோல் சார்ந்த தொழிற்சாலை அமைத்தால் தான் விவசாயிகளுக்கு பயன் தரும் என்றார்.


Next Story