நாகைக்கு நெல் அறுவடை எந்திரங்களை கூடுதலாக கொண்டு வரவேண்டும் விவசாயிகள் கோரிக்கை


நாகைக்கு நெல் அறுவடை எந்திரங்களை கூடுதலாக கொண்டு வரவேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 1 Feb 2020 10:30 PM GMT (Updated: 1 Feb 2020 7:16 PM GMT)

நாகைக்கு நெல் அறுவடை எந்திரங்களை கூடுதலாக கொண்டு வரவேண்டும் என அரசுக்கு கடைமடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் விவசாயிகள் நேரடி விதைப்பு மற்றும் நாற்றங்கால் மூலம் சம்பா சாகுபடி செய்துள்ளனர். மாவட்டத்தில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 404 எக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் 95 ஆயிரத்து 354 எக்டேர் பரப்பளவில் சம்பாவும், 37 ஆயிரத்து 50 எக்டேர் பரப்பளவில் தாளடியும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 66 ஆயிரத்து 926 எக்டேர் பரப்பளவில் நேரடி விதைப்பு மூலமும், 28 ஆயிரத்து 428 எக்டேர் பரப்பளவில் நாற்றங்கால் முறையிலும் சம்பா சாகுபடி செய்துள்ளனர்.

செல்லூர், பாலையூர், பெருங்கடம்பனூர், சிக்கல், ஆழியூர், கீழ்வேளூர், திருமருகல், திட்டச்சேரி, வேளாங்கண்ணி, பூவைத்தேடி, திருமணங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அறுவடை செய்த நெல்லை சாலையில் போட்டு கொட்டி உலர வைக்கின்றனர். இதையடுத்து சாக்குகளில் கட்டி நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்து செல்லும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நாகை கடைமடை விவசாயிகள் கூறியதாவது:-

அறுவடை எந்திரம்

நாகை சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது சம்பா நெல் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதில் பெரும்பாலான விவசாயிகள் எந்திரம் மூலம் வயல்களில் அறுவடை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாகை மாவட்டத்தில் அரசு அறுவடை எந்திரம் 8 மட்டுமே உள்ளது. அதில் 2 எந்திரங்கள் நாகை கோட்டத்தில் உள்ளன. ஒரு மணி நேரத்துக்கு அரசு அறுவடை எந்திரத்திற்கு வாடகை ரூ.1,415 வாங்குகிறார்கள்.

தனியார் அறுவடை எந்திரத்திற்கு வாடகை ரூ.2,500 வாங்கப்படுகிறது. எனவே நாகை மாவட்டத்தில் அதிகளவில் நெல் அறுவடை எந்திரங்களை அரசு கொள்முதல் செய்து வேளாண் பொறியியல் துறைக்கு வழங்க வேண்டும். எந்திர தட்டுப்பாடு காரணமாக தற்போது அறுவடை பணிகள் தாமதமாகிறது. எனவே அறுவடைக்கு தயாரான வயல்களில் மழை பெய்தால், நெல் மணிகள் மழைநீரில் சாய்ந்து அழிந்து விடுமோ என்கிற ஒரு வித அச்சத்தில் விவசாயிகள் இருந்து வருகின்றனர்.

எனவே விவசாயிகளின் நலன் கருதி, அறுவடை எந்திரங்களை கூடுதலாக அரசு கொண்டு வரவேண்டும்.

உலர்களங்கள்

மேலும் நாகை பகுதிகளில் உள்ள நெல் உலர் களங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் வயல் பகுதிக்கு அருகே உள்ள சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் நெல்லை கொட்டி உலர வைத்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே கிராம பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நெல் உலர்களங்களை கண்டறித்து அதனை விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், அறுவடை செய்த நெல்லின் ஈரப்பதம் அதிகமாக காணப்படும். 17 சதவீதம் அளவு ஈரப்பதம் கொண்ட நெல்லை மட்டுமே கொள்முதல் நிலையங்களில் எடுக்கிறார்கள். இதனால் பெரும்பாலானோர் தாங்கள் கொண்டு வந்த நெல்லை திரும்ப உலர வைப்பதற்காக அனுப்பப்பட்டு அலைக்கழிக்கப்படுகிறார்கள். எனவே நெல்லின் ஈரப்பதத்திற்கான அளவை அரசு 20 சதவீதம் அதிகமாக எடுக்க வேண்டும்.

இவ்வாறு கடைமடை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story