சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் 138 பேருக்கு பணி நியமன ஆணை


சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் 138 பேருக்கு பணி நியமன ஆணை
x
தினத்தந்தி 1 Feb 2020 11:00 PM GMT (Updated: 1 Feb 2020 8:54 PM GMT)

சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் 138 பேருக்கு புதிதாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

சேலம்,

சேலம் ராமகிருஷ்ண சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் நேற்று சேமநல ஓட்டுனர், நடத்துனர் மற்றும் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, ஜி.வெங்கடாஜலம், வெற்றிவேல், சக்திவேல், அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட மேலாண் இயக்குனர் அன்பு ஆப்ரகாம் (பொறுப்பு) ஆகியோர் கலந்து கொண்டு 138 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

சேலம் மண்டலத்தில் மட்டும் சேமநல ஓட்டுனர்களாக பணியாற்றிய 120 தகுதியுடைய நபர்களுக்கு தினக்கூலி பணி நியமன ஆணையும், இறந்த பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் ஓட்டுனர் 14 பேருக்கும், நடத்துனர் 4 பேருக்கும் என மொத்தம் 138 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

அதிக வருவாய்

விழாவில் சேலம் கோட்ட மேலாண் இயக்குனர் அன்பு ஆப்ரகாம் பேசுகையில், கடந்த 3 மாதங்களில் தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக கோட்டங்களில் சேலம் கோட்டம் அதிக வருவாய் ஈட்டி முதலிடத்தில் உள்ளது. இதற்காக ஓட்டுனர், நடத்துனர் மற்றும் இதர அலுவலர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். மேச்சேரியில் புதிதாக அரசு போக்குவரத்து கழக பணிமனை ஒன்றை அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான முதல்கட்ட ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஓட்டுனர்கள், நடத்துனர்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும், என்றார்.

நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்ட பொது மேலாளர் ஆறுமுகம், துணை மேலாளர்கள் சுவர்ணலதா, சிவமணி கலைவாணன், ராஜேந்திரன், அண்ணா தொழிற்சங்கத்தின் சேலம் மண்டல செயலாளர் சென்னகிருஷ்ணன், பொருளாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story